கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது
Coimbatore Narcotics Smuggling : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரின் கதவுகளில் ரகசிய அறை அமைத்து ரூ. 10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ எம்எம்டிஏ வீரிய ரக போதைப் பொருளை கடத்திய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதில் 97 கிராம் அளவிலான எம். டி. எம். ஏ. ரக போதை பொருள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த காரில் வந்தவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து பெரிய அளவில் வீரிய ரக போதை பொருள் கடத்திவரப்பட்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், “ஆபரேஷன் டூ பான்” மாநில நோடல் அதிகாரி பூட்டா விமலா ஆதித்யா, திருச்சி சரக டிஐஜி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனியார் விடுதியில் இருந்த 3 பேர் கைது
இதில், போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு டான்சாப் மற்றும் மஞ்சேரி தடுப்பு படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் திலீப் தலைமையிலான போலீசார் தனியார் விடுதியில் தங்கியிருந்த 3 பேரை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!
போதைப் பொருள் கடத்தல் கும்பல்
இதில், அவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பந்தநல்லூர், மாம்பாவலத்தில் பகுதியை சேர்ந்த ஜாபீர் அலி ( 32 வயது), மஞ்சேரி ஆனைக்கயம், கடவத்துவூட்டைச் சேர்ந்த சயீம் அக்பர் ( 21 வயது), வயநாடு மாவட்டம், மேம்பாடி அருகே உள்ள கரிம்பயில் பகுதியை சேர்ந்த முகம்மது சாஹில் ( 34 வயது) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அதில் சோதனை மேற்கொண்டனர்.
ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
இதில், காரின் 4 கதவுகளின் உள்புற பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சுமார் 12.80 கிலோ எம்.டி.எம்.ஏ. படிகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: “டாஸ்மாக்கில் MRP-ஐ விட ரூ.1 அதிகமா வாங்குனா சஸ்பெண்ட்!”.. பேரவையில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!