AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“டாஸ்மாக்கில் MRP-ஐ விட ரூ.1 அதிகமா வாங்குனா சஸ்பெண்ட்!”.. பேரவையில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

Salary Hike for TASMAC Employees: தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குப் பிரமாண்ட ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை அமைச்சர் அறிவித்தார். அதேவேளையில், மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் ஊழியர்கள் மீது தற்காலிகப் பணிநீக்கம் மற்றும் நிரந்தரப் பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

“டாஸ்மாக்கில் MRP-ஐ விட ரூ.1 அதிகமா வாங்குனா சஸ்பெண்ட்!”.. பேரவையில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
அமைச்சர் விக்னேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Aug 2026 13:45 PM IST

சென்னை, ஆகஸ்ட் 31: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, துறை சார்ந்த அமைச்சர் பல்வேறு புதிய மற்றும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, கடந்த 23 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த டாஸ்மாக் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேசமயம், நுகர்வோரிடம் அதிக விலை வசூலிக்கும் ஊழியர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கையையும் அரசு விடுத்துள்ளது.

இதையும் படிக்க: ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விவரம்:

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய மாற்றங்களை அமைச்சர் பேரவையில் வாசித்தார். இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.33,283 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத் தேவைகளுக்காக முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பண்டிகை முன்பணம் மற்றும் கூடுதல் சலுகைகள்:

ஊதிய உயர்வு மட்டுமின்றி டாஸ்மாக் பணியாளர்களின் நலன் கருதி மேலும் பல புதிய சலுகைகளும் பேரவையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஊழியர்களுக்குப் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், ஆண்டிற்கு 3 ஜோடி சீருடைகள் தைப்பதற்கான செலவாக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடைகளின் தூய்மைப் பணிகளுக்காகப் பகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஊழியர்களுக்குச் சுழற்சி முறையில் 8 மணி நேர வேலை, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள்

கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபட்டுச் சிறை தண்டனைக்குப் பின் மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு, அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைப் பலப்படுத்த ரூ.2.58 கோடி செலவில் நவீன உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.10 கோடி நிதியும், சமூக ஊடகப் பிரச்சாரத்திற்கு ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!

அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை:

டாஸ்மாக் ஊழியர்களின் நலன்களை அரசு கவனித்துக் கொள்ளும் அதேவேளையில், கடைகளில் MRP விலையை விட ரூ.1 கூடுதலாக வசூலித்தால் கூட சகித்துக் கொள்ளப்படாது என அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். முதன்முறையாகக் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடியாக 3 மாதங்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படும் என்றும், அதே தவறு மீண்டும் தொடர்ந்தால் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது. நுகர்வோரிடமிருந்தோ அல்லது அரசுக்கோ சேர வேண்டிய பணத்தில் எந்தவிதமான ஊழலையும் அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Follow Us