‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!
Global Sports City Project: தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து தவெக அரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும், 46 விளையாட்டுகளுடன் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட்டு 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதேவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 31: தமிழக சட்டமன்றப் பேரவையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைப்பதாகத் திட்டமிடப்பட்ட ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ (Global Sports City) திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், பரந்தூர் விமான நிலைய திட்டம் போல் விளையாட்டு நகர திட்டமும் கைவிடப்பட்டதா? இல்லையென்றால், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயிநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதற்குத் துறை சார்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான விளக்கம் அளித்துப் பதிலளித்தார்.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
46 விளையாட்டுகளுடன் ஒலிம்பிக் தரத்தில் சீரமைப்பு:
சட்டப்பேரவையில் நிலவிய விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்காத நிலையை மாற்றி புதிய கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது என்றார். செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் கைவிடப்படவில்லை என்று தெளிவுபடுத்திய அவர், அத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 46 வகையான விளையாட்டு வசதிகளுடன் சர்வதேச மற்றும் ஒலிம்பிக் தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். புதிய திட்ட விளக்க அறிக்கை தாயாரானதும், முதலமைச்சரின் ஆய்வுக்குப் பின் அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகள் விரைவாகத் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் முற்றுப்பெறும் என உறுதியளித்தார்.
விரைந்து முடித்துத் தர உதயநிதி வலியுறுத்தல்:
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்காகத் தங்கள் ஆட்சிக்காலத்தில் தனியார் ஆலோசனைக் குழு மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முதற்கட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக பிஎம்எக்ஸ் சைக்கிளிங் தடம் மற்றும் நீர் விளையாட்டு மையங்களுடன் திட்டமிடப்பட்ட இத்திட்டத்தில் சிறு மாற்றங்களைச் செய்யப் போவதாக அரசு தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொண்ட அவர், விளையாட்டு வீரர்களின் நலனைக் கருதி இத்திட்டப் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடித்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
வரலாற்றுச் சாதனை படைக்கும் இலக்குடன் அரசு:
கடந்த 1994-ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேசத் தரத்திலான மாபெரும் விளையாட்டு அரங்கம் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தற்போதைய அரசு மாநிலத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளையாட்டு விடுதிகளைத் திறப்பதுடன் 10 ஒலிம்பிக் அகாடமிகளையும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த ஆரோக்கியமான விவாதம் மற்றும் விளக்கங்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.