பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு
Milk Procurement Price Hike: தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். முன்னதாக கொள்முதல் விலை ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தனியாருக்கு இணையான விலை கோரி பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.44 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 31: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அந்தவகையில், ஏற்கெனவே, பால் கொள்முதல் விலை ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டது. எனினும், தனியாரில் பால் கொள்முதல் விலை அதிகமாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, உற்பத்தியாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகள்:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வாசித்தார். அதில் மிகவும் முக்கியமான திட்டமாகப் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுப் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் ஆவின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் லட்சக்கணக்கான கிராமப்புறப் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்புகளுக்கு மதிப்பளித்து மேலும் ரூ.3 உயர்வு:
ஏற்கெனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆகத் தமிழக அரசு அண்மையில் உயர்த்தியிருந்தது. இருப்பினும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை வழங்கி வரும் சூழலில், அரசு அறிவித்த ரூ.41 கொள்முதல் விலை போதுமானதாக இல்லை எனப் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இச்சூழலைக் கவனத்தில் கொண்டு, உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, ஒட்டுமொத்த கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக மாற்றியமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
பால் உற்பத்தியாளர்களின் நிலைப்பாடும் நன்மைகளும்:
தனியார் நிறுவனங்களின் போட்டி மற்றும் உற்பத்திச் செலவு உயர்வால் ஆவினுக்குப் பால் வழங்கும் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் சந்தித்து வந்த சவால்களுக்கு இந்த விலை உயர்வு நல்ல தீர்வாக அமையும். இப்போதைய உயர்வு மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், ஆவின் நிறுவனத்திற்கு வழக்கமாக வரும் பாலின் அளவும் கணிசமாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. அரசின் இந்த விரைவான நடவடிக்கைக்குப் பல்வேறு பால் உற்பத்தியாளர் சங்கங்களும் விவசாய அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.