பரந்தூர் கைவிடப்பட்ட நிலையில் புது பிளான்.. சென்னை விமான நிலையத்திற்கு அடையாறு ஆற்றோரம் 4 கி.மீ மேம்பாலம்!
Chennai Airport Expansion Plan: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாகத் தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அடையாறு ஆற்றின் இயற்கை நீரோட்டத்திற்கும் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாத வகையில், பொழிச்சலூர் மற்றும் தாரப்பாக்கம் வழியாக 4 கி.மீ நீளத்தில் மேம்பால அணுகுசாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 31: காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த புதிய பசுமைப் புல விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும் தமிழக அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள இணைப்புச் சாலைகளை மேம்படுத்துவது மற்றும் புதிய முனையங்களை அமைப்பது குறித்த பலகட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் புயல் வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: “ராகுலா.. விஜய்யா?”.. பிளவுபடும் தவெக கூட்டணி.. ராஜினாமா எச்சரிக்கையால் கிளம்பிய புதுப் புயல்!!
விரைவில் ஒப்பந்தப் புள்ளி:
இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, சென்னை விமான நிலையத்தைத் தாம்பரம் – மதுரவாயில் புறவழிச்சாலையுடன் நேரடியாக இணைப்பது தொடர்பாகச் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த அரசு அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. அடையாறு ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு வராத வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது. இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி முகமை பொழிச்சலூர் மற்றும் தாரப்பாக்கம் வழியாகச் சுமார் 4 கிலோமீட்டர் நீளத்தில் புதிய மேம்பால அணுகுசாலை ஒன்றை அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5வது முனையம் குறித்து பரிசீலனை:
மேலும், விமான நிலைய வளாகத்தினுள் தற்போதைய உள்கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. புதிய நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், இரண்டு குறுக்கு ஓடு பாதைகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் ஐந்தாவது புதிய முனையத்தை அமைப்பது குறித்து விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய துணை முனையம் அமைக்கப்பட்டால், சென்னை விமான நிலையத்தின் ஒட்டுமொத்தப் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சத்திலிருந்து 5 கோடியே 50 லட்சமாக கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்… ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்… அமைச்சர் பரபரப்பு கருத்து
நவீனமடையும் சர்வதேச விமான நிலையம்:
அதேபோன்று, விமானங்கள் தரையிறங்கியவுடன் விரைவாக வெளியேறுவதற்கான ‘டாக்சி வே’ வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், ஒரு மணி நேரத்தில் கையாளப்படும் விமானங்களின் எண்ணிக்கையை 35-லிருந்து 45-ஆக உயர்த்த முடியும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய விரிவான சீரமைப்புப் பணிகள் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் நாட்களில் மேலும் நவீனமடைந்து, பயணிகளுக்குச் சிறப்பான சேவையை வழங்கும் மையமாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.