செப்டம்பர் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 31ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் பெரும்பாலும் லேசான மழை மட்டுமே பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடரும் மழை:
அதேபோல், செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செப்டம்பர் 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது
செப்டம்பர் 4ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “டாஸ்மாக்கில் MRP-ஐ விட ரூ.1 அதிகமா வாங்குனா சஸ்பெண்ட்!”.. பேரவையில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.