பொங்கல் இலவச வேட்டி, சேலையில் அதிரடி மாற்றம்.. மக்கள் வியக்கும் வகையில் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!
Minister Vijay Balaji Announced : தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது, புதிய டிசைனில் 4 முழு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 31- ஆம் தேதி) 4 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எழுந்து பேசுகையில், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேஷ்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்து இருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு, கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்து பேசியதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறையை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
4 முழு வேட்டி வேண்டும் என பொதுமக்கள் விருப்பம்
அதன்படி, முதல்- அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் துறை செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில், பெரும்பாலான பொதுமக்கள் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் தான் 4 முழ வேட்டியும், ஜரிகை வைக்கப்பட்ட சேலையும் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு




5.25 லட்சம் சேலைகள் கொள்முதல் செய்ய திட்டம்
மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலை வாய்ப்பு மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. மேலும், நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட வேட்டிகள் மற்றும் சேலைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
8 முழத்தில் இருந்து 4 முழமாக வேட்டி குறைப்பு
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு வேஷ்டி மற்றும் ஒரு சேலை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வேட்டியானது சுமார் 8 முழம் ஆகும். அதுவும், ஒரே டிசைனில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 8 முழம் வேட்டி, 4 முழமாக குறைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது. அத்துடன், அந்த வேட்டி மற்றும் சேலையில் உள்ள டிசைன்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: மின்சார வாகனம் முதல் உதவித்தொகை உயர்வு வரை.. மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியிடப்பட்ட 9 முக்கிய அறிவிப்புகள்..