“சினிமா படம் மாதிரி ஆட்சி நடத்துறாங்க.. சபாநாயகர் நடுநிலை இல்லை!”.. தவெக அரசைத் தூள் தூளாக்கிய டிடிவி தினகரன்!!
TTV Dhinakaran Slams TVK Government: தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு 'ரீல்ஸ்' மற்றும் சினிமா கவர்ச்சியால் மட்டுமே இயங்கி வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நடுநிலை தவறி செயல்படுவதாகவும், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அடிப்படைத் தமிழ் மற்றும் கணித அறிவுகூட இல்லை என்றும் அவர் சாடினார்.
சென்னை, செப்.02: தமிழக அரசியல் களத்தில் தற்போதைய தவெக ஆட்சிக் காலத்தின் செயல்பாடுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய ஆட்சி எதார்த்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக, சமூக வலைதள ரீல்ஸ்கள் மற்றும் சினிமா மாயையை மட்டுமே நம்பி இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி குறித்தும் தனது பாணியில் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க: “100 நாட்கள் வரை காத்திருக்கப் போகிறீர்களா?”.. தூய்மைப் பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி!!
சினிமா மாயையும் எதார்த்தமற்ற ஆட்சியும்:
செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.டி.வி. தினகரன், “இந்த ஆட்சியே ஒரு சினிமா படம் பார்ப்பது போல் தான் இருக்கிறது. எதார்த்தத்திற்கும் இந்த ஆட்சியின் நடவடிக்கைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு இளைஞர்களையும் இளம்பெண்களையும் கவர்ந்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். யார் வேட்பாளர் என்றே தெரியாமல், சினிமா கதாநாயகன் மீது கொண்ட நம்பிக்கையால் வாக்களித்த வாக்காளர்கள் இப்போது ஏமாந்து நிற்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற ஆளுமைகள் நீண்டகால அரசியல் அனுபவத்திற்குப் பிறகே ஆட்சியை வழிநடத்தினார்கள். ஆனால், இப்போது 24-ஆம் புலிகேசி படத்தில் வருவது போன்ற ஒரு சூழலே சட்டமன்றத்தில் நிலவுகிறது” என்று விமர்சித்தார்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மீது குற்றச்சாட்டு:
சட்டப்பேரவையை வழிநடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மீது நேரடி குற்றச்சாட்டைச் சுமத்திய டி.டி.வி. தினகரன், “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எனக்கு நீண்டகால நண்பர்தான். ஆனால் அவர் பேரவையில் நடுநிலையாகச் செயல்படுவது போலக் காட்டிக் கொள்கிறாரே தவிர, உண்மையில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் வரம்பின்றி பேச வாய்ப்பளிக்கிறார். அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிய பிறகு, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகக் கூறுகிறார். ஆனால், நேரலையில் ஒளிபரப்பான அந்தப் பகுதிகளை எடுத்து தவெகவினர் சோஷியல் மீடியாவில் போட்டு ஏதோ சாதனை செய்தது போலக் காட்டிக் கொள்கிறார்கள். சபாநாயகர் நடுநிலையோடு பேரவையை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!
அமைச்சர்களின் தகுதி, விவசாயிகளின் பிரச்சனை:
தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் பேசும் பல அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் தாய்மொழித் தமிழைக்கூட ஒழுங்காகப் படிக்கத் தெரியவில்லை; அடிப்படை கணித அறிவோ, தொலைநோக்குப் பார்வையோ அவர்களிடம் இல்லை. மில்லிமீட்டருக்கும் மில்லிலிட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அமைச்சர்கள் பேசுகிறார்கள். விவசாயிகள் வறட்சியினாலும், தண்ணீர் தட்டுப்பாட்டினாலும் தவித்து வரும் வேளையில், முதலமைச்சர் விஜய்யோ காலை முதல் இரவு வரை சூட்டிங் போல அரசியல் நடத்தி வருகிறார். 2500 ரூபாய் பணம், 6 இலவச சிலிண்டர்கள் என வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு இப்போது நிறைவேற்ற முடியாமல் முழிக்கிறார்கள்” எனத் தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்தார்.