தந்தையின் நண்பர் வீட்டில் கைவரிசை.. 9 பவுன் நகையை திருடி காதலனுக்கு புதிய KTM பைக் வாங்கி கொடுத்த காதலி கைது.. கோவையில் தில்லாலங்கடி சம்பவம்!
Pollachi College Student Arrested : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தந்தையின் நண்பர் வீட்டில் 9 பவுன் நகையை திருடி விற்ற ரூ. 2.5 லட்சத்தில் காதலனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆ. சங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், பொள்ளாச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழ்ச்செல்வன் கோவை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மாணவி நகைகளை திருடியதை ஒத்துக் கொண்டார்.
நகையை திருடி விற்ற பணத்தில் காதலனுக்கு பைக்
மேலும், இது தொடர்பாக அந்த மாணவி போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டுக்கு சென்ற மாணவி வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். அதனை, அவரது வீட்டின் அருகே உள்ள நகை கடையில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதில், கிடைத்த அந்த பணத்தை மக்கினாம்பட்டியை சேர்ந்த தனது காதலனுக்கு விலை உயர்ந்த பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Watch Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை.. இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ..




கோவை சிறையில் அடைக்கப்பட்ட கல்லூரி மாணவி
இதை தொடர்ந்து, கல்லூரி மாணவி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பொள்ளாச்சி ஜே. எம். 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன், அந்த மாணவியின் காதலனையும், அவரிடம் உள்ள விலை உயர்ந்த பைக்கையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகையை திருடி விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தின் மூலம் தனது காதலனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்ததை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவியின் செயலால் பெரும் பரபரப்பு
இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், தனது தந்தையின் நண்பர் வீட்டில் மாணவி நகை திருடிய சம்பவமும், அதில் கிடைத்த பணத்தை தனது காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்த சம்பவமும் இந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தீபாவளி பயணம்…. ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு