கோவையில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்த்த வட மாநில தொழிலாளி – தட்டி தூக்கிய போலீஸ்
: கோவை, தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள வாடகை வீட்டின் பின்புறத்தில், காய்கறி செடிகளுக்கு நடுவே ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை தடாகம் போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், ஜூன் 12 : கோவை, தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள வாடகை வீட்டின் பின்புறத்தில், காய்கறி செடிகளுக்கு நடுவே ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை தடாகம் போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மாதபநந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்ள சிவகாமி என்பவரது வீட்டில் தனது மனைவியுடன் வாடகைக்குக் குடி வந்து உள்ளார்.
கோவையில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்த்த வட மாநில தொழிலாளி
இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மாதபநந்தா ஜெனா, தான் குடியிருக்கும் வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் தங்களுக்குத் தேவையான காய்கறி செடிகளை நட்டு வைத்து உள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் புகைப்பதற்காக இரண்டு கஞ்சா செடிகளையும் ரகசியமாக நட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்து உள்ளார்.
இதையும் படிக்க : மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை – லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்




நாளடைவில் அந்த கஞ்சா செடிகள் சுமார் 7 அடி உயரத்திற்கு அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகத் தடாகம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் (Inspector) சுமதி தலைமையிலான தனிப்படை போலீசார் பன்னிமடை நாகவள்ளியம்மன் கோவில் எதிரே உள்ள குறிப்பிட்ட அந்த வீட்டிற்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் சுமார் 7 அடி நீளத்திற்கு செழிப்பாக வளர்ந்து நின்ற 1 கிலோ 445 கிராம் எடை உள்ள 2 கஞ்சா செடிகளைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, சட்டவிரோதமாகப் போதைச் செடிகளை வளர்த்த குற்றத்திற்காக மாதபநந்தா ஜெனாவை போலீசார் கைது செய்தனர் மேலும் அங்கு இருந்த 7 அடி உயர கஞ்சா செடிகளையும் போலீசார் வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தடாகம் காவல் நிலையத்தில் NDPS போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் வீட்டுத் தோட்டத்திலேயே துணிச்சலாகக் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள்ளது.