தவெக போட்ட “பவர் ஷேரிங்” பிள்ளையார் சூழி.. தமிழக அரசியலில் கட்டாயமாகிறதா கூட்டணி ஆட்சி முறை!
Tamilnadu Coalition Govt And Power Sharing: தமிழகத்தில் தவெக ஆட்சியில் கூட்டணி ஆட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறை தொடரும் என்றே தமிழக அரசியில் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், தமிழகத்தின் முதல் முதலமைச்சராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி) பதவியேற்றார். இந்த தேர்தல் முதல் கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்து கூட்டணி ஆட்சி முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியில் பெரிதளவில் வரவேற்றுள்ளன. இதனால், வரும் காலங்களிலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவே தெரிகிறது.
கூட்டணி ஆட்சி – ஆட்சி அதிகாரத்துக்கு பிள்ளையார் சூழி போட்ட தவெக
ஏனென்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையே கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் முறையாக அதிகார பகிர்வு மற்றும் கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: நாங்க இல்லனா திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது… ஆ.ராசாவின் கருத்தால் கொந்தளித்த காதர் மொய்தீன்!




தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை தொடரும்
இது தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், தமிழகத்தில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சி முறையே தொடங்கி உள்ளது. இந்த முறை இத்துடன் நிற்காது வரும் காலங்களிலும் கூட்டணி ஆட்சி முறை தான் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இதே போல, விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில், தற்போது கூட்டணி ஆட்சி முறை அமைந்துள்ளது.
வரும் காலங்களில் தொடரும் கூட்டணி ஆட்சி முறை
இதனால், வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகார பகிர்வு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலை உருவானதாக தெரிகிறது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணி ஆட்சி மற்றும் அதிகார பகிர்வு அளிப்பது என்பது அனைத்து கட்சிகள் மத்தியிலும் பிரதான நடைமுறையாக மாறும் என கருதப்படுகிறது. கூட்டணி கட்யின் தலைமையிடம் தொகுதி பங்கீடு, மாநிலங்களவை, மக்களவை இடம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பெறுவது போல, வரும் காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைகளை பிற கட்சிகள் முன்வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற கட்சிகள்
தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி அமைந்த காரணத்தால் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல, அமைச்சரவை பக்கமே வராத விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதனால், கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு முறை தொடரும் என்றே அரசியல் நிலவரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: கூட்டணி கட்சிகள் ஆதரவின்றி திமுக தனித்து வெற்றி பெற்றிருக்க முடியாது.. தமிழக காங்கிரஸ் பகிரங்க கருத்து!