வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர் தலையில் கோடாரி தாக்குதல்.. மூன்று மணி நேர சிகிச்சைக்கு பிறகு கோடாரி நீக்கம்!
Man Attacked By Axe While Sleeping | ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியில் வீட்டில் தூங்க்கிக்கொண்டு இருந்தவர் மீது கோடாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அந்த நபரின் தலையில் சிக்கிய கோடாரி சுமார் 3 மணி நேர சிகிச்சைக்கு பிறகு அகற்றம்.
கோட்டா, ஜூலை 13 : ராஜஸ்தானில் (Rajasthan) வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட நிலையில், அவரது தலையில் சிக்கிக்கொண்ட கோடாரியை மருத்துவர்கள் மூன்று மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர். அந்த நபரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அடுத்த 8 முதல் 10 நாட்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தூங்கிக்கொண்டு இருந்தவர் தலையில் கோடாரி தாக்குதல்
ராஜஸ்தான் மாநிலம், பரான் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராம்ஜிலால். இவர் ஜூலை 11, 2026 அன்று தனது வீட்டில் மகள் மற்றும் மனைவியுடன் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரி தலையில் கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்று நள்ளிரவு 2 மணிக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி தனது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அவரது தலையில் இடது பக்கத்தில் கோடாரியால் வெப்பட்டு, கோடாரி அவரது தலையில் சிக்கிக்கொண்டு இருப்பதையும் கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்.. எடுத்துச்சென்ற மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆட்சியர் எச்சரிக்கை
அறுவை சிகிச்சை மூலம் கோடாரியை நீக்கிய மருத்துவர்கள்
அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து அவர் கோட்டா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தலையில் கோடாரி சிக்கிக்கொண்டு இருந்தபடியே அவர் NHCM மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : வீட்டை சூழ்ந்த மழைநீர்.. கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கர்ப்பிணியை காப்பாற்றிய மக்கள்!
இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள மருத்துவர் எஸ்என் கவுத்தம், அந்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அழைத்துவரப்பட்டார். அவரது தலையில் 2.5 செமீ ஆழத்திற்கு கோடாரி பதிந்திருந்தது. அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளது. அவரது உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு தலையில் இருந்த கோடாரி நீக்கம் செய்யப்பட்டது. அவர் இன்னும் ஆபத்தான நிலையில் தான் இருக்கிறார் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
அவர் தூங்கிக்கொண்டு இருந்தபோது தலையில் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.