கூட்டணி கட்சிகள் ஆதரவின்றி திமுக தனித்து வெற்றி பெற்றிருக்க முடியாது.. தமிழக காங்கிரஸ் பகிரங்க கருத்து!
Tamil Nadu Congress Party: தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு இன்றி எந்த தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் தனித்து வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. திமுக இளைஞர் அணி தீர்மானத்தை கண்டித்து இந்த கருத்தை முன் வைத்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதில், திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்தியவர்கள் என்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டு பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களையே குறிவைத்து தாக்குவது திமுகவின் இரட்டை வேட அரசியலை வெளிக்காட்டுகிறது.
கூட்டணி கட்சி ஆதரவின்றி திமுக தனித்து வெல்ல முடியாது
கூட்டணி கட்சிகளின் ஆதரவும், வாக்கு வலிமையும் இல்லாமல் திமுக தமிழகத்தில் தனித்து நின்று என்றும் வெற்றி பெற்றது இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தங்களது அரசியல் தோல்விகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சியை குறிவைத்து திமுக தீர்மானங்கள் நிறைவேற்றுவது அரசியல் நாகரீகம் அற்ற செயல் ஆகும். தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியலை வலுப்படுத்துவதற்காக பல்வேறு கட்சிகள் இணைந்து போராடிய வரலாற்றை திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் மறைக்க முடியாது.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலையின் பரபரப்பு பின்னணி.. ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!




கூட்டணி கட்சிகளின் பங்களிப்பை திமுக மறக்க கூடாது
அரசியலில் நன்றி உணர்வும், கூட்டணி தர்மமும் மிக மிக முக்கியம் ஆகும். ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து அவற்றை மீறி செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மட்டும் இன்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பங்களிப்பையும் திராவிட முன்னேற்ற கழகம் ஒருபோதும் மறக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்து இருந்தது. இந்த தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தையும் காங்கிரஸ் பெற்றது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகிய காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இதில், காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை திமுகவை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இனி லேட்டா வந்தா அவ்ளோதான்… பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!