கடலூர்- புதுச்சேரி எல்லையில் ரத்தக்களம்.. நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்!
Cuddalore Car Driver Murder : கடலூர் - புதுச்சேரி எல்லையில் கார் ஓட்டுநரை இ ரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்தது .
கடலூர் மாவட்டம், பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் ( 31 வயது). கார் ஓட்டுநர். இவர், ரங்காரெட்டிப்பாளையம் கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில், கடலூர்- புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டை சாவடி அருகே தனது காரை நிறுத்தி அதனை சசிகுமார் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சசிகுமார் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை, சசிகுமார் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அந்த வெடிகுண்டு கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், பலத்த காயமடைந்து சசிகுமார் அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனே, அந்த கும்பல் கொண்டு வந்த பயங்கர ஆயுதங்களால் சசிகுமாரை சரமாரியாக வெட்டியது. இதில், தலை, முகம், கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
நாட்டு வெடிகுண்டு வீசி ஓட்டுநர் கொலை
இதில், ரத்த வெள்ளத்தில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, அந்த கும்பல் அவர் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர கொலை சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், கொலை சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: விசில் அடித்ததால் சர்ச்சை.. நெல்லை மாமன்ற கவுன்சிலர் சஸ்பெண்ட்.. மேயர் அதிரடி உத்தரவு!




கண்காணிப்பு கேமரா வாயிலாக ஆய்வு
அங்கு, கொடூர கும்பலால் கொலை செய்யப்பட்டு கிடந்த சசிகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரி-கடலூர் போலீசார் விசாரணை
புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லையில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவத்தால், புதுச்சேரியை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், புதுச்சேரி மாநில போலீசாரும் விசாரணை கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நிகழ்ந்த இந்த கொடூர கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!