“இது தவெக பிரச்சனை இல்லை, தமிழ்நாட்டின் பிரச்சனை!”.. மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!!
Anbumani Ramadoss: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஆக.1: மேகதாது அணை விவகாரம் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சியின் பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனை எனக் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தனது அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தயக்கம் ஏன்?:
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தமிழக அரசு ஏன் தயங்குகிறது? இது ஏதோ தவெகவின் பிரச்சனை கிடையாது, மீண்டும் மீண்டும் சொல்கிறேன், இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பிரச்சனை. இந்த விவகாரத்தைக் கர்நாடகா அரசு வேறு விதமாகக் கொண்டு செல்லப் பார்க்கிறது. அந்தச் சூழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விழுந்துவிடக் கூடாது.”
மத்திய பிஜேபி – கர்நாடக காங்கிரஸ் கூட்டுச் சதி:
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மத்தியில் உள்ள பாஜகவும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த விவகாரத்தில் ஒன்று சேர்ந்து கூட்டுச் சதி செய்து வருகின்றன. இந்தச் சதியில் தமிழகமும், தமிழக முதலமைச்சரும் விழுந்துவிடக் கூடாது. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் மற்றும் விவசாயிகளின் உறுதியான கோரிக்கையாகும்.
கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தவறு:
கர்நாடக முதலமைச்சரைச் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறித்து விமர்சித்த அவர், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதையே நாம் அங்கீகரிக்கவில்லை. அணை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கும் போது, அம்மாநிலத்திற்கே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
மேலும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
யார் வழிநடத்துகிறார்கள்?:
முதலமைச்சரை யார் இவ்வாறு தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒரு தவறான போக்காகும். கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.