வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? டிடிவி தினகரன் பரபரப்பு கேள்வி
TTV Dhinakaran Questions TVK: தமிழக சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, சமுதாயத்தை சீரழிக்க கூடியது ஜல்லிக்கட்டு என்று தெரிவித்தது சர்ச்சையானது. இதுகுறித்து பதிவிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அரசு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முயல்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 28 : சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 29, 2026 நேற்று பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, “இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு திடலுக்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம் என்றார். அவரது பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் இதுகுறித்து பதிவிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அரசு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முயல்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா?
இது தொடர்பாக அவர் தனது பதிவில், தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.




இதையும் படிக்க : டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
டிடிவி தினகரன் கேள்வி
தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 29, 2026
அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க : திமுகவில் 16-வது உட்கட்சித் தேர்தல்.. 110 மாவட்ட செயலாளர்களும் உட்கட்சித் தேர்தல் மூலமே தேர்வு.. அதிரடியில் மு.க.ஸ்டாலின்!!
எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை சட்டமன்ற பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.