ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏவின் பேச்சு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக அதிரடி பாய்ச்சல்!
TVK MLA Remarks Jallikattu : தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ கருப்பையாக ஜல்லிக்கட்டு குறித்து அவதூறாக பேசிய தற்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தலைமை வலியுறுத்தி உள்ளது .
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ கருப்பையா பேசியபோது, ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு என்று தெரிவித்திருந்தார். எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இது தொடர்பாக அதிமுக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து சட்டமன்றத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியது கடும் கண்டனத்துக்குரியதாகும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் கொண்டுள்ள ஒரு எம்எல்ஏ இப்படி பேசி இருப்பது கடும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.
ஏறு தழுவுதல் புரிதல் இல்லாமல் பேசிய எம்எல்ஏ
சங்க காலம் முதலே தமிழர்களுக்கும், மாடுகளுக்கும் இடையேயான உறவை பறைசாற்றும் வகையில் ஏறு தழுவுதல் போட்டி இருந்து வருகிறது. இது குறித்த முழு புரிதல் இல்லாமல் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறாரா. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாடுபட்டுள்ளனர். இந்த வரலாற்றுப் புரட்சியின் விளைவாக அன்றைய ஆட்சியில் இருந்த அதிமுக, மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பெற்றுத் தந்தது.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை கொண்டு வர முயற்சியா
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள தமிழக வெற்றிக் கழத்தின் சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை எதற்காக அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து வருகிறதா. அதற்காக தான் ஃபர்ஸ்ட் லுக்- ஆக தனது கட்சியின் எம்எல்ஏ வை பேச வைத்துள்ளார் தற்போதைய முதல்வர் என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பான சந்தேகங்களும் தமிழக மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.
முதல் அமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்
எனவே, சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ கருப்பையா பேசியதற்கு தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் தவெகவினர்.. நயினார் நாகேந்திரன் கடும் பாய்ச்சல்!