டெல்லியில் மாடல் அழகி படுகொலை.. தப்பிய டிரைனரை சுட்டுப் பிடித்த காவல்துறை.. திடுக்கிடும் பின்னணி!
Delhi Model Muskan Murder: டெல்லியில் 21 வயது மாடல் அழகி மற்றும் பல்கலைக்கழக மாணவி முஸ்கான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உடற்பயிற்சி பயிற்சியாளரான இம்ரான் என்பவரைப் பொலிஸார் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் போக்சோ வழக்கு, ஒருவரைத் தாக்கி கோமா நிலைக்குத் தள்ளியது உட்பட இம்ரான் நடத்திய கொடூரக் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
டெல்லி, ஆகஸ்ட் 29: தலைநகர் டெல்லியில் 21 வயதான டெல்லி பல்கலைக்கழக மாணவியும் மாடல் அழகியுமான முஸ்கான், திலக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட முன்னாள் ஜிம் டிரைனரான ஆகிப் என்ற இம்ரானைப் பிடிக்க டெல்லி காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் இம்ரானைக் காவல்துறையினர் சுட்டுகாயத்துடன் கைது செய்தனர். இக்கைதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இம்ரான்கடந்த 8 ஆண்டுகளாகப் பல்வேறு கொடூரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதையும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..
8 ஆண்டுகளாக தொடரும் வன்முறைப் பாதை
டெல்லி காவல்துறையின் தீவிர விசாரணையில், இம்ரான் மீது கடந்த 8 ஆண்டுகளில் பல தீவிரமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்புச் சட்டமான ‘போக்சோ’ வழக்கு, நபர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி கோமா நிலைக்குத் தள்ளிய கொலை முயற்சி வழக்கு எனப் பல வன்முறைப் பின்னணிகள் இவனுக்குப் பின்னால் இருப்பது அம்பலமாகியுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்களில் தவறான நடத்தையின் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜிம் பயிற்சியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்ட இவன், போதைப்பொருளுக்கு அடிமையாகித் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
முஸ்கான் படுகொலையும் கைதும்:
முஸ்கானும் இம்ரானும் கடந்த 18 மாதங்களாகப் பழகி வந்த நிலையில், முஸ்கானின் சமூகப் பழகல்கள் மற்றும் தொடர்புகள் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் இம்ரான் இக்கொடூரக் கொலையை அரங்கேற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தன்று முஸ்கானை அவரது வீட்டிலேயே வைத்துக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவளது ஐபோனை எடுத்துக்கொண்டு இம்ரான் தப்பியோடினான். இதனைத் தொடர்ந்து இம்ரானை ராஜோரி கார்டன் பகுதியில் காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, அவன் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினான். தற்காப்பிற்காக போலீஸார் நடத்திய எதிர்ச் சூட்டில் இம்ரானின் காலில் குண்டுபாய்ந்து, அவன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான்.
மேலும் படிக்க: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!
தொடரும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள்:
கைது செய்யப்பட்ட இம்ரான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறான். இச்சம்பவத்தில் இம்ரானுக்கு உதவி செய்தவர்கள் யார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து டெல்லி காவல் துறை மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த இம்ரான் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.