அனைவருக்கு வங்கி சேவை – 12வது ஆண்டில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம்
PM Jan Dhan Yojana : இந்தியாவில் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கிய பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம், தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கிய பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம், தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாட்டின் நிதி நடவடிக்கைகளில் முக்கிய திட்டமாக உருவெடுத்துள்ள ஜன் தன் யோஜனா மூலம், வங்கி சேவை கிடைக்காத மக்கள் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மத்திய அரசின் தகவலின்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் 14.72 கோடியாக இருந்த ஜன் தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, 2026 ஆகஸ்ட் 19ஆம் தேதி நிலவரப்படி 59.09 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 32.92 கோடி கணக்குகள் பெண்களின் கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கணக்குகளில் 45.95 கோடி கணக்குகள் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளிலும், 13.14 கோடி கணக்குகள் நகர்ப்புற மற்றும் பெருநகர பகுதிகளிலும் உள்ளன.
ஜன் தன் யோஜனா என்றால் என்ன?
பிரதமர் ஜன் தன் யோஜனா என்பது இந்தியாவின் தேசிய நிதி உள்ளடக்கத் திட்டமாகும். குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் வங்கி சேவைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடிப்படை வங்கி சேவைகள், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டம் முதலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கி கணக்கு என்ற இலக்குடன் தொடங்கப்பட்டது. பின்னர் 2018ஆம் ஆண்டு, வங்கி கணக்கு இல்லாத ஒவ்வொரு வயது வந்த நபருக்கும் வங்கி கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
யார் ஜன் தன் கணக்கு தொடங்கலாம்?
இந்திய குடியுரிமை கொண்ட அனைவரும் பிரதமர் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. வங்கி கணக்கு இல்லாத நபருக்கு அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கப்படும். மேலும், இந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வங்கிக் கிளை அல்லது வங்கி மித்ரா மையத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கைத் தொடங்கலாம். தகுதியுடையவர்கள் கூட்டுக் கணக்கையும் தொடங்க முடியும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஜன் தன் கணக்கு தொடங்குவதற்கு பொதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது ரேஷன் கார்டு போன்ற அரசு அடையாள ஆவணங்கள் தேவைப்படும். மேலும், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின்சாரம், தொலைபேசி அல்லது குடிநீர் கட்டண ரசீது போன்ற முகவரி சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு தொடக்கப் படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படலாம்.