அரசு மருத்துவமனைகளில் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை.. ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட், AI சாட்பாட் வசதி விரைவில் அறிமுகம்!!
Online Appointment System AI Chatbot: தமிழக அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று காத்திருப்பதைத் தவிர்க்க AI சாட்பாட் மற்றும் ஆன்லைன் முன்அனுமதி வசதிகள் விரைவில் கொண்டு வரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளைத் தூய்மையாகவும், நோயாளிகளை மரியாதையுடனும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இருப்பினும், புறநோயாளிப் பிரிவில் மருத்துவப் சீட்டு பெறுவதற்கும் மருத்துவர்களைச் சந்திப்பதற்கும் நோயாளிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், பொதுமக்களுக்குத் தரமான உடனடி மருத்துவச் சேவைகளை வழங்கவும் தமிழக அரசுப் பொதுச் சுகாதாரத் துறை பல்வேறு நவீன சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளின் சேவைகளை மேம்படுத்தும் வகையிலும், நோயாளிகள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும் புதிய தொழில்நுட்ப வசதிகள் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.’
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!
24 மணி நேரச் செயல்பாடு:
மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தடையின்றி இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் பிரதான கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாக எழும் புகார்களைச் சுட்டிக்காட்டி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்படும் மருத்துவமனை அமைப்புகளையும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளையும் முறையாகப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டடங்களைக் கட்டுவதோடு நிறுத்திவிடாமல், அவற்றின் தூய்மையையும் பராமரிப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
நோயாளிக்கான மரியாதை:
பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களைக் கனிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டியதன் அவசியத்தை அரசு நிர்வாகம் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் முதலில் நாடிச் செல்வது காவல் நிலையங்களையும் மருத்துவமனைகளையும்தான் என்பதால், மருத்துவச் சேவையில் ஈடுபடுவோர் நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பழைய அணுகுமுறைகளிலிருந்து மாறி, மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!
வரிசையைத் தவிர்க்க AI சாட்பாட்:
மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஏஐ (AI) சாட்பாட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே மருத்துவமனைச் சேவைகளைப் பெற இந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கும். மேலும், முதற்கட்டமாகச் சில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சோதனையோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட “ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட்” முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த வசதியைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.