திமுகவில் 16-வது உட்கட்சித் தேர்தல்.. 110 மாவட்ட செயலாளர்களும் உட்கட்சித் தேர்தல் மூலமே தேர்வு.. அதிரடியில் மு.க.ஸ்டாலின்!!
DMK Internal Election: திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் உட்கட்சித் தேர்தல் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 70 வயது வரம்பு, பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகளுடன் விரைவில் 16-வது உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 29: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக தனது கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் முக்கியக் கட்டமாக, கட்சி நிர்வாகத்தில் நிர்வாக வசதியை மேம்படுத்தும் பொருட்டு திமுகவின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த புதிய 110 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் திமுக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. பரிந்துரைகள் மற்றும் நியமனங்கள் மூலமாக இல்லாமல், ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல் நடத்தி மட்டுமே 110 மாவட்டச் செயலாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!
தொகுதி பார்வையாளர்கள் நியமனம்:
உட்கட்சித் தேர்தலைச் சீராக நடத்தும் வகையில், ஓரிரு நாட்களில் 110 தொகுதிகளுக்கும் புதிய தொகுதி பார்வையாளர்களை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தொகுதி பார்வையாளர்களும், தற்போது பதவியில் இருக்கும் 77 மாவட்டச் செயலாளர்களும் இணைந்து களமிறங்கவுள்ளனர். இவர்கள் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கிளைக் கழகம் முதல் பகுதிச் செயலாளர் வரையிலான உட்கட்சி எல்லைகளை மறுவரையறை செய்து உருவாக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பிரசாரமும் முறைப்படி தொடங்கப்பட உள்ளது.
16-வது உட்கட்சித் தேர்தலும் புதிய நிபந்தனைகளும்:
உறுப்பினர் சேர்க்கை பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, திமுகவின் 16-வது உட்கட்சித் தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டில் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய மாற்றங்களுடன் இந்தத் தேர்தல் அமையவுள்ளது. இம்முறை மாவட்டச் செயலாளர் பதவிக்கு நால்வரும் போட்டியிடும் வகையில் பல கடுமையான நிபந்தனைகளை திமுக தலைமை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு நபர் 3 முறைக்கு மேல் தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருக்க முடியாது என்பதும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பதவி வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதும் முக்கிய நிபந்தனைகளாகப் பார்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!
பட்டியலினத்தோருக்கு முக்கியத்துவம்:
கட்சியில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் நோக்கில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் கணிசமான முன்னுரிமை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய மாவட்டங்கள் குறித்த பட்டியல் மற்றும் புள்ளிவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உட்கட்சித் தேர்தல் முடிவடைந்து 110 புதிய மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அளவிலான திமுகவின் முக்கிய பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.