குடியரசு தினவிழா…காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் சென்னை…7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
Chennai Republic Day: குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சோதனை சாவடி, ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஓட்டு மொத்த சென்னையும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை திங்கள்கிழமை ( ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக டெல்லியில் சுமார் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, சென்னையில் மெரினா- காமராஜர் சாலை வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வுக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெறும் காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார்
இந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை போலீஸ் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 7000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், சென்னை விமான நிலையம், சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை பகுதிகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடியரசு தின சிறப்பு பேரணிக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது.. லிஸ்ட் இதோ!




சந்தேக நபர்களின் நடமாட்டம்
மேலும், சென்னையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் போலீசார் நேரடியாக சென்று சந்தேகத்துக்கிடமான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்பது தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். மேலும், சந்தேகம் அளிக்கும் வகையில் யாரேனும் தங்கினால் அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் போலீசார் அறிவுறுத்தினர். இதே போல, சென்னை முழுவதும் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைப்பு
மேலும், திருவொற்றியூர், மீனம்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இதில், குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பிரிவின் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் படை பிரிவு ஆகியவற்றுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடல் பகுதியில் நாசவேலை தடுப்பு சோதனை
மேலும், கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் நாசவேலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், ஓட்டுமொத்த சென்னையும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: போலீஸ் வாகனத்தில் பிரபல ரவுடியை கொலை செய்ய முயற்சி… போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு – பரபரப்பு சம்பவம்