கோவை அருகே மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பக்தர்கள் படுகாயம்
Palamalai Mountain Road Accident: கோவை அருகே பாலமலை அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு வந்து திருநெல்வேலி திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் வாகனம், 3வது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிபடாமல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோயம்புத்தூர், செப்டம்பர் 6 : கோவை அருகே பாலமலை அரங்கநாதர் சுவாமி கோயிலில் ஆன்மீகச் சேவை முடித்து விட்டுத் திருநெல்வேலி திரும்பிக் கொண்டு இருந்த பக்தர்களின் வாகனம், 3வது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிபடாமல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை அருகே மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 பக்தர்கள், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட புகழ்பெற்ற பாலமலை அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு ஆன்மீகச் சேவை செய்ய முடிவு செய்தனர். இதற்காகக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு TN 74 Q 8947 எண் கொண்ட வாகனத்தில் பாலமலைக்கு வந்து சேர்ந்து, தீவிரச் சேவைப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க : சென்னையில் அடுத்த பயங்கரம் – கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – பிளஸ் 2 மாணவர் உட்பட 4 பேர் கைது
தங்களது சேவைப் பணிகளை முழுமையாக முடித்துக் கொண்டு, இன்று (செப்டம்பர் 06) மாலை சுமார் 6.00 மணியளவில் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்குத் திரும்புவதற்காக அந்த வேனில் புறப்பட்டு உள்ளனர். பாலமலை மலைப் பாதையில் வாகனம் கீழே இறங்கிக் கொண்டு இருந்த போது, 3-வது கொண்டைஊசி வளைவு (3rd Hairpin Bend) அருகே எதிர்பாராத விதமாக வாகனத்தின் பிரேக் பிடிபடாமல் கட்டுப்பாட்டை இழந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிய அந்த 407 வேன், பாதையின் ஓரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. வாகனம் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பக்தர்கள் அலறித் துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!
இந்தக் கொடூர விபத்தில் வாகனத்தில் பயணித்த 22 நபர்களுக்கும் லேசான மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கே.ஆர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.