பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்?.. இன்று வெளியாகிறது அறிவிப்பு!!
2026 Pongal cash gift: இதனிடையே, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், எவ்வளவு தொகை வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, ஜனவரி 04: இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களின் முக்கிய பண்பாட்டு விழாவான பொங்கலை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. அதேசமயம், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப் பணமும் சில வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. அப்படி, வரவிருக்கும் பொங்கலுக்கும் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில், கடந்த 2021 தேர்தல் காலத்தில் அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை 2021ம் ஆண்டை விட ரொக்கப் பணம் அதிகம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. இதுதான் வியூகம்?
திமுக 2023ல் மட்டும் ரூ.1000 வழங்கியது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டும் இதேபோன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டாலும், ரொக்கப்பணம் சில பிரிவினருக்கு வழங்கப்படவில்லை. அதாவது, மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அதேபோல், 2025ல் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.




2026ம் ஆண்டிலும் ரொக்கப்பணம் கிடையாதா?
இந்நிலையில், வரும் 2026 பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளது. இந்த பரிசுத் தொகுப்புகளை கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இதனுடன் ரொக்கப் பணம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா? ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி எழுந்தது.
ரூ.3000 வழங்க முடிவு:
இதனிடையே, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், எவ்வளவு தொகை வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: பல ஆண்டு கால போராட்டத்துக்கு முடிவு…மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…முதல்வரின் பொங்கல் பரிசு!
இன்று வெளியாகிறது அறிவிப்பு:
இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 8ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.