குடிக்க தண்ணீர் கேட்பது போல நாடகம்.. மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை அபேஸ்.. 2 கல்லூரி மாணவிகள் கைது!
Ramanathapuram Jewellery theft 3 Held: ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் இருந்து சுமார் 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற இரு கல்லூரி மாணவிகள் உள்ப 3 பேரை போலீசார் கைது செய்ததுடன், திருட்டு நகையை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் ( 86 வயது). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், அவரது 4 மகன்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால், மாரியம்மாள் இங்கு தனியாக வசித்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் தனது வாக்கை செலுத்தி விட்டு வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது, 2 இளம் பெண்கள் உள்பட மூவர் மாரியம்மாளின் வீட்டுக்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மாரியம்மாள் வீட்டின் உள்ளே தண்ணீர் எடுப்பதற்காக சென்றார். உடனே அந்த மூன்று பேரும் அவரை பின்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று மாரியம்மாள் முகத்தில் மிளகாய் பொடி ஸ்பிரேயை அடித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மாரியம்மாள் கண்களில் மிளகாய் பொடி பட்டதில் கண் எரிச்சல் அடைந்தது.
6 பவுன் சங்கில் – 1 பவுன் மோதிரம் திருட்டு
உடனே, அந்த மூவரும் மாரியமாளை பலமாக தாக்கி கீழே தள்ளினர். இதில் மாரியம்மாள் மயங்கி விழுந்தார். பின்னர், அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் மற்றும் கம்மல் ஆகியவற்றை மூன்று பேரும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாயல்குடி போலீசார் வரைந்து வந்து மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்.. ஜூன் 1-இல் மாணவர்களுக்கு விநியோகம்!




நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்
இதில், தூத்துக்குடி மாவட்டம், சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, தாளமுத்து நகரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் ( 25 வயது) ஆகிய மூவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நண்பர்களான இவர்கள் மூவரும் நரிப்பையூர் வடக்கு தெருவில் சென்று வந்த போது மாரியம்மாள் தனியாக இருப்பதை பார்த்த அவர்கள் மாரியம்மாள் அணிந்திருந்த நகையை திருடுவதற்கு திட்டம் தீட்டினர்.
கல்லூரி மாணவிகள் உள்பட மூவர் கைது – நகைகள் மீட்பு
அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்றுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்ததுடன் தூத்துக்குடியில் நகைக்கடையில் அடகு வைத்த மாரியம்மாளின் நகையை மீட்டனர்.
மேலும் படிக்க: விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்