செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் திருட்டு.. நாகர்கோவில் தபால் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. சிக்கும் ஊழியர்கள்!
Nagercoil Post Office Embezzled: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தபால் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களது செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தி இருந்த நிலையில், அந்த பணத்துக்கான வரவு தங்களது கணக்கில் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று கணக்கு புத்தகத்தை சமர்ப்பித்து வரவு கணக்கை சரிபார்க்க சென்றனர். அப்போது, பொதுமக்கள் செலுத்திய தொகைக்கும், தபால் நிலையத்தின் கணினி பதிவேட்டில் உள்ள தொகைக்கும் வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தபால் நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிகிறது.
தபால் நிலையத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை
அதன் அடிப்படையில், தபால் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பொது மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக தெரிகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து ரசீதுகளும் கணினி பதிவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: 2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!




சந்தேக ஊழியர்களிடம் உரிய விசாரணை
மேலும், தலைமை தபால் நிலையத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. தபால் நிலையத்தில் வரவு செலவு கணக்கு விவரங்கள் தணிக்கை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் பின்னரே எவ்வளவு தொகை முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்திய பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களது சேமிப்பு பணத்தை தபால் நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி செலுத்தியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், முறைகேட்டில் ஈடுபட்ட தபால் துறை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க: தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!