இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!
Kanchipuram Crime: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாநகர பகுதியில் உள்ள சின்ன காஞ்சிபுரத்தில் ராஜாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளுக்கு வரக்கூடிய காய்கறி மூட்டைகளை இறக்குவதற்காக 15- க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுள் முரளி என்ற நபரும் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முரளி மற்றும் அவரது மனைவி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சுமை தூக்கும் தொழிலாளி முரளி வேலை முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மார்க்கெட் பகுதியில் தூங்குவது வழக்கமாகும். இதே போல, நேற்று இரவு முரளி வழக்கம் போல் மார்க்கெட்டில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லாமல் அந்த பகுதியிலேயே மது அருந்திவிட்டு படுத்து தூங்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமை தூக்கும் தொழிலாளி
இந்த நிலையில், இன்று அதிகாலை மார்க்கெட் பகுதிக்கு வந்த மற்ற தொழிலாளர்கள் முரளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முரளியின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், சில தடயங்கள் கிடைத்தன. உயிரிழந்த உடலின் தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் இருந்தது.
மேலும் படிக்க: தேனி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்..




தொழிலாளி கொலைக்கான காரணம் என்ன
இதனால், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன்படி, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முரளி மற்றும் அவரது மனைவி இடையே சொத்து விவகாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இதன் காரணமாக கொலை நடந்ததா அல்லது நேற்று இரவு மது அருந்திய போது சக தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 தனிப்படைகள் அமைத்து விசாரணை
முன்னதாக அம்பகரத்தில் காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கொலை குற்றவாளிகளை விற்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கசந்த திருமணமும் முடிந்த காதலும்.. ஒன்றாகத் தங்கிய காதல் ஜோடி சடலங்களாக மீட்பு.. சென்னையில் பயங்கரம்!!