தென்காசி போலீஸ் விசாரணைக்கு அதிருப்தி? ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Alankulam Shooting Incident : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பனை ஏறும் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் தென்காசி போலீசார் விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பகுதியில் கல் இறக்கப்படுவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு, கல் இறக்கி கொண்டிருந்ததாக கூறப்படும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் சேட் என்பவரது மகன் மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை, பனை ஏறும் தொழிலாளியான மணிகண்டன் கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த ரத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் மணிகண்டனின் இரு கால்களில் சுட்டார். இதில், குண்டு பாய்ந்த மணிகண்டன் மற்றும் தாக்குதலில் காயம் அடைந்த இசக்கி ராஜா ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எஸ்ஐ இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன்படி, சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா உள்பட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி. ஐ. ஜி. உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த கோரி மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில், பெருமாள் சேட் ஆஜராகி எனது மகன் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் தென்காசி மாவட்ட போசார் விசாரணை மேற்கொள்ளக் கூடாது.
மேலும் படிக்க: மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. “தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்”.. திருமாவளவன்




தென்காசி போலீசார் விசாரணை மேற்கொள்ளக்கூடாது
அதற்கு பதிலாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களை முன் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பனை ஏறி மீதான துப்பாக்கி சூடு சம்பவ வழக்கில் தென்காசி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொள்ளக் கூடாது எனவும், சிபிஐ அலுவலகம் மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
துப்பாக்கி சூடு வழக்கில் வெளியான வீடியோ
இதனிடையே, பனை மரத்தில் மணிகண்டன் கள் இறக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், மணிகண்டனை வீட்டில் இருந்து எஸ்ஐ இசக்கி ராஜா பைக்கில் அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்த வீடியோக்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்