நாடாளுமன்ற வளாகத்தில் தனியாகப் போராட்டம் நடத்தும் திமுக எம்பிக்கள்!
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தங்கள் எதிர்கால நலனுக்காக ஜனநாயக வழியில் போராடும் மாணவர்களைத் தாக்கி அடக்குமுறையில் ஈடுபடும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், நீட் தேர்வு ஒழியும் வரை மாணவர்களுக்கு விடிவில்லை எனக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்களுடன் கனிமொழி எம்பி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
டெல்லி, ஜூலை 23: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நாடு முழுவதும் வெடித்துள்ள தேர்வு முறைகேடுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) திரண்டு தனியாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம் குறித்துக் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
படிக்கட்டுகளில் பதாகைகளுடன் முழக்கம்!
இதனைத் தொடர்ந்து, INDIA கூட்டணியின் ஏனைய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக எம்பிக்கள் தனியாக திரண்டு நாடாளுமன்ற கட்டடத்தின் நுழைவாயில் படிக்கட்டுகளில் நின்று நீட் தேர்வுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
திமுக எம்பி கனிமொழி தலைமையில் திரண்ட எம்பிக்கள், “BAN NEET”, “ABOLISH NEET”,”SAVE STUDENTS”, “EDUCATION IS NOT FOR SALE” போன்ற அழுத்தமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், சுவரொட்டிகளையும் கைகளில் ஏந்தியபடி, நீட் தேர்வை உடனடியாக முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தித் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட்:
There will be no justice for students until NEET is abolished.
Today, we, the DMK MPs, staged a protest within the Parliament premises demanding the complete abolition of NEET, which continues to shatter the dreams of countless students aspiring to pursue medical education.… pic.twitter.com/ZKwafI8tQw
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 23, 2026
இதனிடையே, இந்தப் போராட்டம் குறித்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நீட் ஒழியும் வரை, மாணவர்களுக்கு விடிவில்லை. நம் பிள்ளைகளின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!”.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி!
மருத்துவக் கனவோடு படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகடா ஆக்கும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து, மருத்துவச் சேர்க்கை உரிமையை மீண்டும் மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.