இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கு வெவ்வேறு கால இடைவெளிகள் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
செப்டம்பர் 8, 2026: சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர், முந்தைய சிலிண்டரை முன்பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
சிலிண்டர் முன்பதிவில் இருந்த நடைமுறை:
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கு வெவ்வேறு கால இடைவெளிகள் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
சிலிண்டர் முன்பதிவு – 25 நாட்களாக குறைப்பு:
தற்போது நாட்டின் எரிவாயு சிலிண்டர் விநியோக நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விநியோகத்துக்கான நிலுவைகளும் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்து நுகர்வோருக்கும் 25 நாட்கள் என்ற ஒரே கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதட்டம் – எல்.பி.ஜி இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்:
மேற்கு ஆசியா மோதலின்போது, உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதமும், LNG இறக்குமதியில் 60 சதவீதமும், LPG இறக்குமதியில் சுமார் 90 சதவீதமும் இந்த வழித்தடத்தை சார்ந்துள்ளன.
இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக பெறப்பட்டு வந்தது.
மேலும் படிக்க: 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி.. ரூ.703 கோடிக்கு காப்பீடு.. மும்பையில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!
மோதல் நீடித்த காலகட்டத்தில் இந்தியா LPG இறக்குமதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா முக்கிய LPG விநியோக நாடாக உருவெடுத்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற பாரம்பரிய வளைகுடா நாடுகளை பின்னுக்குத் தள்ளியது.
எல்.பி.ஜி நெருக்கடி படிப்படியாக குறைந்துள்ளது:
மேலும், பொதுத்துறை, கூட்டு முயற்சி மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள், அத்துடன் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் LPG உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி நாளொன்றுக்கு 63.81 ஆயிரம் மெட்ரிக் டன்னாக, அதாவது 63,810 டன்னாக உயர்ந்துள்ளது.
இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி படிப்படியாக குறைந்துள்ள நிலையில், நுகர்வோருக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் இருந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.