“எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!”.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி!
Supreme Court Refuses Urgent Hearing on Delhi Student Protest: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், "எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" எனக் கூறி வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
டெல்லி, ஜூலை 22: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் பல்வேறு வாலிபர் அமைப்பினர் பேரணி மற்றும் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர், சன்சத் மார்க் (நாடாளுமன்ற சாலை) உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் தலைநகர் டெல்லி முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.
மேலும் படிக்க: ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது! டெல்லியில் பெரும் பரபரப்பு!
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீச்சு:
போராட்டத்தைக் கலைக்க முற்பட்ட டெல்லி காவல்துறையினர், மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் என்ற பாகுபாடின்றிப் பலரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் அடைத்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் பல மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்:
காவல்துறையின் இந்த அத்துமீறல் மற்றும் தாக்குதலுக்கு எதிராக, மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் 3 அவசர மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில், காவல்துறை மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தொடர்பான காணொளி ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனை நீதிமன்றம் பார்த்துப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
மேலும் படிக்க: தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது…. தவெக கடும் கண்டனம்
எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்:
இந்த அவசர வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, வழக்கறிஞர்களின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது. நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள், எங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள்; உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள். நாங்கள் எந்த காணொளிகளையும் பார்க்க விரும்பவில்லை. நாடு முழுவதும் இந்தத் தடியடி சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் மாணவர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.