ஜனநாயகன் இணையத்தில் லீக் – ஐடி ஊழியர் கைது – பரபரப்பு தகவல்
முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் பட இணையத்தில் கசிந்த விவகாரத்தில் மேலும் ஒரு ஐடி ஊழியரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளின் காரணமாக இதுவரை வெளியாகாமல் இருந்தது. கடந்த ஜனவரி 9, 2026 அன்று பொங்கலை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை வெளியாகாதது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. பலமுறை சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பித்தும் இந்த படத்துக்கு சென்சார் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது. பின்னர் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் விவகாரத்தில் ஐடி ஊழியர் கைது
இது முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்கிடையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இது வரை 9 பேரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க : சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்




மேலும் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதிப் ராகவ், தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் சார்பில் அவருக்கு இடைக்கால நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. படத்தின் இணையதளத்தில் கசிந்ததற்கு அவர் காரணமில்லை என்றாலும் அவரது ஸ்டுடியோவில் இருந்து கசிந்தது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் மேலும் ஒருவரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் ஜனநாயகன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்பட்டது. அதற்கேற்ப இந்தப் படம் முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதையும் படிக்க : ஜெயிலர் 2 படத்தை வெளியிடுவதில் குழப்பத்தில் உள்ள படக்குழு – என்ன பிரச்சனை தெரியுமா?
இநதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜனநாயகன் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், படத்தின் பிரச்னையை பற்றி பேசுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. அப்படியே எனக்கு இருந்தாலும் அதனை வெளியிடுவதற்கு உங்களுக்கு தைரியம் இருக்காது என்றார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்துக்கு இதுவரை சென்சார் கிடைக்காத காரணத்தால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது.