தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
Tamilaga Vettri Kazhagam: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் பொறிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.926 சில்வர் தட்டுகள் மற்றும் குக்கர் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி திசை காவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் வைர வேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் வள்ளிவி நாயகம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், அந்த வீட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3,926 சில்வர் தட்டுகள் மற்றும் குக்கர்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த வீட்டின் உரிமையாளரான பொன் இசக்கி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தவெக விசில் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த சில்வர் தட்டுகள் மற்றும் குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமறைவான தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர்
மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதை அறிந்த தவெக செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து முன்னதாகவே தலைமறைவாகினார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் மற்றும் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக மாறுபடும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களின் விவரம் இதோ..




தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், பாத்திரங்கள், சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் 2160 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, தேர்தல் பறக்கும் படைகள் கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களிலும் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே தவெக சின்னம் பொறிக்கப்பட்ட பாத்திரங்கள் பறிமுதல்
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தமிழக வெற்றி கழகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் 100- க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி.. வெளியான புதிய தமிழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..