புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி சட்டப்பேரவை.. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
Puducherry Assembly Renovating Work: புதுச்சேரி மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த மாநில சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அறைகள், பேரவை வளாக தரைகள் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அந்த மாநில மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால், விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தல்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் 3 நாட்களில், அதாவது மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை புதுச்சேரி மாநில தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி பெறும் கட்சி புதிதாக ஆட்சி அமைக்கும். இதில், முதல்வர் முதல் எம்எல்ஏக்கள் வரை அனைவரும் பதவி ஏற்பார்கள். இதற்காக, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணி
முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது அலுவலகங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு காலி செய்தனர். அங்கிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய வந்த கார்களையும் சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் உள்ள அறைகள் அனைத்தும் புதுப்பிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி.. டெல்லிக்கு பறந்த கோப்பு… மௌனம் காக்கும் முதல்வர் ரங்கசாமி!




பேரவை முழுவதும் வண்ணம் தீட்டும் பணி
இதில், அமைச்சர்கள் பயன்படுத்தும் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடிக்கப்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பேரவை வளாகத்தில் காணப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதில், குறிப்பாக சட்டப்பேரவையில் உள்ள தரைகளில் டைல்ஸ் மற்றும் மொசைக் ஆகியவை பாலிஷ் போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அறைகளுக்குள் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை.
வாஸ்து பார்க்கும் அமைச்சர்கள் – எம்எல்ஏக்கள்
ஏனென்றால், புதிதாக பதவி ஏற்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது வாஸ்து பிரகாரத்துக்கு ஏற்ப அறைகளை திசை மாற்றி அமைப்பார்கள். இதன் காரணமாக அறைகளின் உள்ளே எந்த விதமான புதுப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பதவி ஏற்ற பிறகு அவர்களது அறைகளில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது.
இதில், என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அறைகள் காலி.. கார்கள் ஒப்படைப்பு.. விடைபெறும் புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள்!