புதுச்சேரியில் முடிந்த தேர்தல் பரப்புரை.. நான்கு முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?.. அனல் பறந்த தேர்தல் களம்!!
Puducherry Assembly Election: தேர்தலை அமைதியான முறையில் நடத்தப் புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையொட்டி, அங்கு 3,000 காவல்துறையினர் மற்றும் 9 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
Puducherry Polls 2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை (ஏப்ரல் 9) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில்தான் தேர்தல் நடத்தப்படும். ஆனால், இந்த முறை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23-ம் தேதியும் தேர்தல் தேதிகளை அறிவித்துத் தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியது. அதோடு, அசாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த 3 மாநிலங்களிலும் மார்ச் 16-ந்தேதி அன்று தொடங்கி மார்ச் 23 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. மார்ச் 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், மார்ச் 26-ந்தேதி அன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகவும் இருந்தது. அந்தவகையில், 3 மாநிலங்களிலும் நேற்று மாலை 6 மணியுடன் அனல் பறக்கும் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
புதுச்சேரியில் 4 முனைப்போட்டி:
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் களத்தில் உள்ளன. இதுதவிர தவெக- நேயம் மக்கள் கழகம் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களமிறங்கியுள்ளன. மேலும், இம்முறை 150-க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாகவும், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கருதப்படுகிறது
தலைவர்கள் தீவிர பரப்புரை:
இதைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி முதல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியது. முதலமைச்சர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி புதுவை நகரப் பகுதியில் ரோடுஷோ நடத்தினார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இறுதிக்கட்டமாகப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இவர்கள் தவிர தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்தனர்.
பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள்:
தேர்தலை அமைதியான முறையில் நடத்தப் புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையொட்டி, அங்கு 3,000 காவல்துறையினர் மற்றும் 9 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் உள்ள 15 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் முடியும் வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எடப்பாடியில் தவெக வாஷ் அவுட்… வேட்பாளர் மாயம்… வேட்புமனு நிராகரிப்பு… என்ன காரணம்!
தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தல்:
புதுச்சேரி மாநில தேர்தல் நடத்தும் அதிகாரி ஜவகர், பொதுமக்கள் அனைவரும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.