கூலித்தொழிலாளிக்கு ரூ. 7 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை – அதிர்ச்சி சம்பவம்
Labourer Faces Tax Trouble : உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு ரூ.7 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனக்கு உரிய நீதி வேண்டும் என கூலித் தொழிலாளி வருமான வரித்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் ஹபூர் மாவட்டத்தின் கைத்தறி நகரமான பில்குவாவில் உள்ள மொஹல்லா மகாதேவில் வசிக்கும் சுபாஷ் என்பவருக்கு ரூ.7 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டீஸ் வந்துள்ளது. சுபாஷ் ஒரு சாதாரண தொழிலாளியாக பணிபுரிகிறார், அவருக்கு வருமான வரித் துறை இந்த நோட்டீஸ் அனுப்பியது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என சுபாஷ் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். டிவி9 ஹிந்தியில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுபாஷிற்கு என்ன நடந்தது என விவரமாக பார்க்கலாம்.
ஹபூரின் பில்குவாவில் உள்ள மொஹல்லா மகாதேவில் வசிக்கும் சுபாஷ், பல ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் கூலி வேலை செய்து தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து சுபாஷின் வீட்டிற்கு கடிதம் வருகிறது. ஆனால் சுபாஷ் இந்த அறிவிப்பைக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில், வருமான வரித் துறையால் அவருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அதில் அவரது பெயரில் ரூ.7 கோடி பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறை கூலித்தொழிலாளிக்கு நோட்டீஸ்
இந்த விஷயம் குறித்து சுபாஷ் இப்போது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கூலித் தொழிலாளியான சுபாஷ் மொஹல்லாவில் 40 செண்ட் பரப்பளவு கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். தகவலின்படி, 2020-21 ஆம் ஆண்டில், டோஹ்ரானாவில் அமைந்துள்ள மருத்துவமனையிலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான விசாரணையில் இரண்டு பெரிய பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு கிடைத்திருக்கிறது.




சுபாஷின் பெயரில் நடந்த கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனை
இந்தப் பரிவர்த்தனையில் சுபாஷின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. தகவலின்படி, சுபாஷ் என்ற பெயரில் GSTR-1 மற்றும் GSTR-3B இல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவரது பெயரில் சுமார் ரூ.3,27,40,680 மற்றும் ரூ.3,75,74,0850 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனையின் அடிப்படையில், ஹாப்பூரில் உள்ள வருமான வரித் துறை அதிகாரி பிப்ரவரி 9, 2024 அன்று நோட்டீஸ் அனுப்பி சுபாஷிடம் பதில் அளிக்குமாறு தெரிவித்திருக்கிறார். ஆனால், சுபாஷ் வருமான வரித்துறை நோட்டீஸை படிக்காத காரணத்தால் அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நோட்டீஸுக்கு எந்த பதிலும் கிடைக்காததால், வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுபாஷ் அதிகாரிகளை அணுகி தனது நிலையை விளக்கியுள்ளார். இந்த முழு விவகாரத்திலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்துமாறு சுபாஷ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அதிகாரிகளும் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சுபாஷின் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போது, விசாரணைக்குப் பிறகுதான், சுபாஷுக்கும் ரூ.7 கோடி பரிவர்த்தனைக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகத் தெரியும்.