கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.1.8 லட்சத்தை இழந்த நபர் – பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Credit Card Safety Tip : இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கி ரூ.1.8 லட்சத்தை இழந்துள்ளார். இந்த நிலையில் இந்த கட்டுரையில் கிரெடிட் கார்டு மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் நம் வங்கி சம்மந்தப்பட்ட விவரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். குறிப்பாக கிரெடிட் கார்டுகள் (Credit Card) பல நன்மைகள் இருந்தாலும், அதனை வைத்து மோசடி சம்பவங்களும் நடந்து வருகின்றன. தெலங்கானா (Telangana) மாநிலம் ஹைதராபாத்தில் (Hyderabad) சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒரு தனியார் நிறுவன ஊழியர், ஒரு வாட்ஸ்அப் வீடியோ காலில் அவரது கிரெடிட் கார்ட் விவரங்களை பகிர்ந்ததன் மூலம் ரூ.1.8 லட்சம் இழந்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட நபர், எஸ்பிஐ. (SBI) கிரெடிட் கார்டு அதிகாரியாக தன்னைக் காட்டிக்கொண்டு வெரிஃபிகேஷன் என்ற பெயரில் கார்டின் முன்னும் பின்னுமுள்ள விவரங்களையும் CVV எண்ணையும் காண்பிக்கச் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சில நிமிடங்களில் அவரிடம் இருந்து ரூ.1.8 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே தான் மோசடிக்குள்ளானது அவருக்கு தெரியவந்திருக்கிறது.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெறும் நவீன மோசடிகள், இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட டேட்டாவின் படி, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் 18,461 சைபர் மோசடிகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் 27 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது




இந்த மாதிரியான மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- OTP, CVV, கார்டு எண் போன்றவை மிகவும் ரகசியமானவை. எந்தவொரு வங்கி அதிகாரியுமே இது போன்ற விவரங்களை தொலைபேசியில் அழைத்தாலோ, மெசேஜ் செய்தோ கேட்க மாட்டார்கள்.
- உங்களுக்கு இந்த மாதிர அழைப்புகள் வரும் பட்சத்தில் உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைனுக்கு அழைத்து, அந்த நபர் உண்மையிலேயே வங்கி ஊழியரா என்பதை உறுதி செய்யுங்கள்.
- மோசடி குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் 1930 என்ற நம்பருக்கு அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இல் புகார் அளிக்கலாம்.
- புதிய மோசடிகளும் நிதி பாதுகாப்பு முறைகளும் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ளுங்கள். வங்கியின் அடிப்படை செயல்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நிதி அமைச்சகம் மற்றும் தொலைநோக்கு பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இணைந்து அமைப்பை உருவாக்கி நிதி மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பான செயல்முறைகளை வழங்கி மோசடிகளை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இன்று ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் நிலையில், நம்முடைய நிதி பாதுகாப்பு முழுமையாக நம்முடைய கையில் தான் இருக்கிறது. பாதுகாப்பான பழக்கங்களை ஏற்படுத்தி, இந்த வகை மோசடிகளை தவிர்க்கலாம். ஒரு நிமிட அலட்சியம் கூட பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.