செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டுமா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுகள் இதோ!
RBI eases KYC process : வாடிக்கையாளர்களின் செயல்படாத வங்கிக் கணக்குகளை புதுப்பிக்கும் முறைகளை இந்திய ரிசர்வ் வங்கி எளிமைப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் செயல்படாத வங்கி கணக்குகளை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, அல்லது கடன் பெறவோ குறிப்பிட்ட சில வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டியிருக்கும். நம் அந்த வேலையை விட்டு நீங்கிய பிறகோ, அல்லது கடனை அடைத்த பிறகோ நம் அந்த வங்கி கணக்கை முடிக்காமல் வைத்திருப்போம். அப்படி வாடிக்கையாளர்கள் 10 ஆண்டுகளாக எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாமல் வைத்திருக்கும் வங்கி சேமிப்பு அல்லது நிலுவை கணக்குகள் செயலிழந்த கணக்குகள் (Inoperative Accounts) என்று அழைக்கப்படுகின்றன. இதேபோல், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து 10 ஆண்டுகளாக கோரப்படாமல் இருக்கும் பணம் கோரப்படாத தொகை (Unclaimed Deposits) என அழைக்கப்படுகின்றன. இந்த வகை கணக்குகளின் இருப்புத் தொகைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் டெபாசிடர் எஜுகேஷன் அண்ட் அவார்னஸ் ஃபண்ட் (Depositor Education and Awareness Fund) என்ற நிதியில் சேமிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் 12, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின் படி, வாடிக்கையாளர்கள் தற்போது கீழ்க்கண்ட வழிகளில் தங்கள் செயலிழந்த கணக்குகளை மீண்டும் செயல்படுத்தலாம்.
எந்தவொரு கிளையிலும் KYC புதுப்பிக்கலாம்
இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை உருவாக்கிய கிளையிலேயே சென்று KYC (Know Your Customer) விவரங்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எந்தவொரு கிளையிலும் அந்த வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
வீடியோ வழியாக KYC அப்டேட் செய்வதற்கான வாய்ப்பு
வீடியோ மூலம் அடையாளம் நிரூபிக்கும் முறையின் (Video-Customer Identification Process) படி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் தகவல்களை அப்டேட் செய்துவிடலாம். இது முதியவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், மற்றும் புலம் பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது.




வணிக நிரூபர்களின் உதவியுடன் KYC அப்டேட்
வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிரூபர்கள் மூலம் KYC புதுப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு நேரில் சென்று உதவலாம். குறிப்பாக, நகரத்துக்கு வெளியேயும், கிளைகள் இல்லாத பகுதிகளிலும் இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
செயல்படாத கணக்குகளை மீண்டும் எப்படி புதுப்பிப்பது?
செயலிலழந்த கணக்குகளை மேற்சொன்ன முறைகளில், அதாவது, வீடியோ வழியாகவோ, வணிக நிரூபர்கள் மூலமாகவோ, அருகில் உள்ள வங்கி கிளைகள் மூலமாகவோ KYC அப்டேட் செய்து கணக்குகளை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகவும், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் வங்கி சேவைகளை மீண்டும் பெற வழிவகுக்கின்றன. வீடியோ மூலம் KYC, எந்த கிளையிலும் வசதி, பிசிக்கள் உதவியுடன் சேவை என அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு நேரமும் பணமும் மிச்சமாகும் வகையில் அமைந்துள்ளன. இனி உங்கள் செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க இந்த முறைகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.