இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா? உண்மை என்ன?
2026 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா? என்ற கேள்வி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் எழுகின்றன. சிப் விலையேற்றம், 18 தவிகித ஜிஎஸ்டி, உள்நாட்டு உற்பத்திச் சூழல் போன்றவை ஸ்மார்ட்போன் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்கள் இந்தியக் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டன. கல்வி, வங்கிச் சேவைகள், அலுவலகப் பணிகள், பொழுதுபோக்கு மற்றும் அரசு சேவைகளைப் பெறுதல் என அனைத்தும் மொபைல் போன்களைச சார்ந்தே இருக்கின்றன. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலை குறைய வாய்ப்பில்லை என்றே தற்போதைய நிலவரங்கள் உணர்த்துகின்றன. மாறாக, பல காரணிகள் விலை உயர்த்தப்படலாம். இருப்பினும், வாங்குபவர்களுக்கு, குறிப்பாக பட்ஜெட் மற்றும் நடுத்தர ரக ஸ்மார்ட்போன்களைத் தேடுபவர்களுக்கு, நிம்மதி அளிக்கக்கூடிய சில சாதகமான அறிகுறிகளும் உள்ளன.
முக்கியமான ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே இதற்கான முதன்மைக் காரணியாகும். ஒரு போனின் விலையில் கணிசமான பகுதி, அதன் பிராசஸர், மெமரி சிப்கள், கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி போன்ற பாகங்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. சமீபத்திய மாதங்களில், மெமரி சிப்கள் குறிப்பாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தொடர்பான பாகங்களின் விலையில் உயர்வு காணப்படுகிறது. பிசினஸ் ஸ்டாண்டர்ட்இதழின் ஏப்ரல் 2026 அறிக்கையின்படி, இந்தியாவில் விற்பனையாகும் 80க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையில் சராசரியாக 15 சதவிகிதம் விலை உயர்வு பதிவாகியுள்ளது. நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது, அந்தச் சுமை இறுதியில் நுகர்வோர் மீதே சுமத்தப்படுகிறது.
இதையும் படிக்க : விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!




ஜிஎஸ்டி குறைக்கப்படுமா?
இந்த விலை அழுத்தமானது பிரீமியம்ஸ்மார்ட்போன் பிரிவில் இன்னும் அதிகமாகத் தெரிகிறது. அதிநவீன பிராசஸர்கள், சிறந்த கேமரா அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் காரணமாக, பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, இந்த ஆண்டு பிரீமியம் போன்களின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் ஆடம்பரப் பொருட்களிலிருந்து அத்தியாவசிய டிஜிட்டல் கருவிகளாக மாறிவிட்டதாகக் கூறும் தொழில் அமைப்புகள் மற்றும் நிபுணர்கள், ரூ.25,000 வரை விலை கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாகக் குறைக்குமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், குறைந்த மற்றும் நடுத்தர விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும் லட்சக்கணக்கான இந்திய நுகர்வோரே இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.
இதையும் படிக்க : WhatsApp : விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாட்ஸ்அப்பின் Username அம்சம்.. எப்படி செயல்படும்?
உதாரணமாக, ரூ.20,000 அடிப்படை விலை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விகிதத்தின்படி, அதன் விலை ரூ.23,600-ஆக உயர்கிறது. வரி விகிதம் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டால், ஒரு வாடிக்கையாளர் ரூ.2,600 வரை சேமிக்க முடியும். இருப்பினும், இது தற்போதைக்கு ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது. அரசு இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ முடிவை எடுக்கவில்லை.
இந்தியா ஒரு முக்கிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. பல உலகளாவிய நிறுவனங்கள் இப்போது இந்தியாவிலேயே போன்களை அசெம்பிள் செய்து உற்பத்தி செய்வதால், இறக்குமதிச் செலவுகள் குறைய உதவுகிறது.