தலைமுடி உதிர்ந்ததால் வேதனை.. மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. தேனியில் சோகமான நிகழ்வு!
Theni Young Woman Self Harm : தேனி மாவட்டத்தில் தலையில் புழு வெட்டு மற்றும் முடி கொட்டிய காரணத்தால் இளம் பெண் ஒருவர் மின் விசிறியில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் அஞ்சலி ( 19 வயது). இவர், அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி அஞ்சலிக்கு திடீரென தலையில் புழுவெட்டு ஏற்பட்டது. இதற்கு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், புழுவெட்டு குறையவில்லை என்று தெரிகிறது. அத்துடன், புழுவெட்டின் காரணமாக அவரது தலையில் இருந்த முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டத் தொடங்கின. இதனால், வேறு சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவருக்கு புழுவெட்டு மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனை தீர்வாகவில்லை. இதனால் சற்று மனவேதனை அடைந்தார். இது தொடர்பாக தனது தாய் மற்றும் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
மனமுடைந்த மகளுக்கு பெற்றோர் தொடர் ஆறுதல்
அவருக்கு, தந்தை கருப்பையா மற்றும் தாய் ஆகியோர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். அத்துடன், வேறு சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணப்படுத்தி விடலாம் என்று ஆறுதல் கூறினர். ஆனால், இதனை மாணவி அஞ்சலி ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அத்துடன், தனது தலையில் முடி கொட்டி வருவதால் கல்லூரிக்கும் ஒழுங்காக செல்ல முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியவில்லை. சற்று மனதில் சஞ்சலமாக இருப்பதாக மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!




மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்
அப்போதும், அவரது பெற்றோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்றும், தனது பெற்றோரிடம் மாணவி அஞ்சலி மிகுந்த மன வேதனையில் பேசியுள்ளார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, மாணவி அஞ்சலி திடீரென மின்விசிறியில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், தனது மகளின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
தொடர்ந்து, அவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தொடர்ந்து, மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக, கருப்பையா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வருண பகவானே இறங்கி வா.. இரு கழுதைகளுக்கு மேள தாளத்துடன் திருமணம்.. வேலூரில் வினோத வழிபாடு!