வாகன சோதனையில் நிற்காமல் சென்ற இளைஞர்.. லத்தியால் தாக்கியதில் கண் பார்வை பாதிப்பு.. தூத்துக்குடியில் 2 காவலர் மீது அதிரடி நடவடிக்கை!
Thoothukudi 2 Police Man Transfer : தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற இளைஞரை தாக்கிய இரு காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அதிரடியா க உத்தரவு பிறப்பித்தார் .
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி- அடைக்கலாபுரம் பிரதான சாலையில் ஆறுமுகநேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்த விக்னேஷ் ( 25 வயது), அவரது நண்பர் சூர்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால், இதனை கவனிக்காமல் விக்னேஷ் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. உடனே, போலீசார் தான் கையில் வைத்திருந்த லத்தி கம்பால் விக்னேஷ் தாக்கியதாக தெரிகிறது. இதில், அவரின் முகத்தில் கண் இமையில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்து போலீசார் அவரை மீட்டு ஆட்டோ மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞரின் இணையில் 9 தையல்கள்- பார்வை பாதிப்பு
அங்கு, விக்னேஷின் கண் இமை பகுதியில் சுமார் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அவரது பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாகன சோதனையில் நிற்காமல் சென்றதற்காக இளைஞரை போலீசார் கம்பால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கவனத்திற்கு சென்றது. அதன் அடிப்படையில், சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் குறித்தும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: சென்னையில் கொடூரம்.. அக்கா வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை கதவை பூட்டி கழுத்தை அறுத்த கணவன்!
காவல் அதிகாரிகள் விசாரணை
அதன் அடிப்படையில், காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் கஜேந்திரன் ( 43 வயது) மற்றும் மற்றொரு காவலர் காளி ( 31 வயது) ஆகிய இரு காவலர்கள் சம்பவத்தன்று பணியில் இருந்தது தெரியவந்தது அத்துடன் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்த இரு காவலர்கள் தான், அந்த இளைஞரை லத்தியால் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.
இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
இது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் கஜேந்திரன் மற்றும் காளி ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ். பி. சிவ பிரசாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் சோகம்.. மழலையர் பள்ளி வகுப்பறையில் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்!