ராஜினாமா செய்ய நிர்பந்தித்த வைகோ.. “அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை”.. மதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!!
Vaiko Demanded Resignation: தங்களை பதவியை ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்ததாகவும், துரை வைகோ அவதூறு பரப்பியதால் மனமுடைந்து திமுகவிலேயே தொடர முடிவெடுத்துள்ளதாக மதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் தெரிவித்துள்ளனர். அதோடு, இனி திமுக எம்எல்ஏக்களாக செயல்பட போவதாக மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 06: மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர், தங்களை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிர்பந்தித்ததாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மதிமுகவில் தொடர்ந்து செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறியுள்ள அவர்கள், இனி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று, தங்களது முடிவை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : ரூ.1.3 கோடி லஞ்ச பணம் பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 24 அரசு ஊழியர்கள் கைது.. டிவிஏசி அதிரடி நடவடிக்கை!
அண்ணா அறிவாலயத்தில் நடந்த சந்திப்பு:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதிமுகவுக்குள் தொடர் சர்ச்சைகளும் முரண்பாடுகளும் நீடித்து வந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தேர்தலில் போட்டியிடும்போதே திமுக சின்னமான உதயசூரியனில் தான் போட்டியிட்டோம் என்பதால், அப்போதே சட்டரீதியாகத் திமுக உறுப்பினராகவே மாறிவிட்டோம் என்றும், இனி வருங்காலத்திலும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே உறுதியோடு தொடர்வோம் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜூன் 16-க்குப் பிறகு மாறிய சூழல்:
கடந்த 38 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்ததாகவும், வைகோ சரியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தனர். ஜூன் 15-ஆம் தேதி வரை அமைதியாக இருந்த சூழல், ஜூன் 16-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் வைகோவைச் சந்தித்த பின்னரே மாறியதாகக் குறிப்பிட்டனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்பாகத் தங்களது எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வைகோ தங்களைத் தொடர்ந்து நிர்பந்தித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆசை வார்த்தைகளும் நிராகரிப்பும்:
அதோடு, “ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்து மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும்; அமைச்சராகக்கூட ஆகலாம் என வைகோ ஆசை வார்த்தை கூறினார். வைகோவின் ராஜினாமா கோரிக்கையை தங்களால் ஏற்க முடியாமல் போனதற்குக் காரணம் தொகுதி மக்கள் அளித்த ஆதரவே என்று அவர்கள் தெரிவித்தனர். “எங்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்கள் நாங்கள் ராஜினாமா செய்வதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது; சட்டமன்ற உறுப்பினராகவே தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்’ என மக்கள் கேட்டுக்கொண்டனர். தொகுதி மக்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தித் துரோகம் செய்ய மனமில்லாமல், இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றனர்.
துரை வைகோ மீது பாய்ந்த குற்றச்சாட்டு:
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் வைகோவின் பின்னால் உறுதியாகப் பயணித்து வந்ததாகத் தெரிவித்த எம்எல்ஏக்கள், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாங்கள் ‘விலை போய்விட்டோம்’ என்று துரை வைகோ தேவையில்லாமல் அவதூறு பரப்பியதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?
40 வருட உண்மை ஊழியர்களான தங்களை நோக்கிக் கூறப்பட்ட இந்த பழியும் அவதூறும் தங்களது மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும், இனி மதிமுகவில் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வர இதுவே முக்கியக் காரணம் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.