அச்சுறுத்தும் எதிரிகள்.. பாதுகாப்பற்ற சூழல்.. மதுரை எஸ்பி-யிடம் தவெக எம்எல்ஏ பரபரப்பு மனு!
Usilampatti TVK MLA Vijay Petition: மதுரை மாவட்டத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உசிலம்பட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ.வான விஜய் பரபரப்பு மனுவை அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழக எம்எல்ஏவாக இருந்து வருபவர் வழக்கறிஞர் விஜய். இவர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்களில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் எனக்கு எதிராக சில சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக எனது உயிருக்கும், எனது உடமைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
இதன் காரணமாக எனக்கு எந்த நேரமும் ஆபத்து நேரிடலாம் என்ற பயம் நிலவி வருகிறது. எனவே, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பாக எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக எனக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு, காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ விஜய் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ கையில் ஃபைல்.. சிக்கப்போவது யார்?




மதுரை போலீசார் தீவிர விசாரணை
மேலும், இந்த புகார் தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ திடீரென பரபரப்பு புகார் மனுவை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவான சரவணன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் எம். எல். ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
முன்னதாக, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன் மீது லாரியை ஏற்றி விபத்து ஏற்படுத்த முயற்சித்ததாகவும் ஸ்ரீவைகுண்டம் எம். எல். ஏ. சரவணன் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, தற்போது உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளது பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேசன் கடைகளில் சிறப்பு விரல் ரேகை பதிவு முகாம்!