கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து.. பைக் மீது மோதியதில் இருவர் பரிதாப பலி.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்!
Kanyakumari Private Bus Accident; கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழுந்து சென்று பைக் மீது மோதிய விபத்தில் இரு கூலித் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்துக்கு தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( மார்ச் 15) புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 28 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது இன்று திங்கள்கிழமை ( மார்ச் 16) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் எதிர் திசைக்கு சென்று அங்கு இருந்த மின் கம்பத்தில் மோதியதுடன், எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதி அருகில் உள்ள வாய்க்காலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பையங்குளம் பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம்
பேருந்தில் பயணித்த 20- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் தக்கலை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்தின் உள்ளே சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை… கைதான எஸ்பி செந்தில்குமார்… விசாரணைக்கு 2 தனிப்படைகள் அமைப்பு!




பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் விபத்து
இதே போல, சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியான விஜயன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் சடலங்களை மீட்டு உடல் கூராய்வுக்காக தக்கலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலில், ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக விபத்து நிகழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் சொகுசு ஆம்னி பேருந்தின் ஓட்டுநரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரேன் மூலம் ஆம்னி பேருந்து மீட்பு
மேலும், விபத்தில் சிக்கிய தனியார் ஆம்னி சொகுசு பேருந்தை கிரேன் மூலம் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் தனியார் சொகுசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இரு கூலித் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை … சென்னை அருகே அதிகாலையில் பெரும் பரபரப்பு.!