சென்னையில் கழுகு பார்வையில் தேர்தல் பறக்கும் படை… 128 வாகனங்களில் களமிறங்கியது!
Flying Squad Election Monitoring: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 128 வாகனங்களில் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தல் கண்காணிப்பு பணியில் இறங்கினர். இதன் மூலம் சென்னை முழுவதும் சல்லடை போட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், தேர்தல் தேதி எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்திருந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 15) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட மறு நிமிடமே தமிழகத்தில் தேர்தலில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி, அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் முதல்வர் படங்கள் நீக்கம் செய்யப்பட்டன. இதே போல, பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், அரசியல் தலைவர்களின் சிலைகள், சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சிகளின் சின்னங்கள் ஆகியவை மறைப்புகள் கொண்டு மறைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து, பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
128 வாகனங்களில் கண்காணிப்பை தொடங்கிய பறக்கும் படை
இதை மீறி பணம் எடுத்துச் செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு வீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவை சுமார் 128 வாகனங்களில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் இருந்து தங்களது பணியை தொடங்கின.
மேலும் படிக்க: தேர்தல் நடத்தை விதிகள்.. எவ்வளவு ரொக்கப்பணம் வாகனத்தில் கொண்டு செல்லலாம் தெரியுமா?




ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை
இதில், பெரம்பூர், ராதாகிருஷ்ணன் நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், எழும்பூர் (தனி), திரு வி க நகர் ( தனி), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராயபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், விருகம்பாக்கம், அண்ணா நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தியாகராய நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 வாகனங்கள் வீதம் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 128 வாகனங்கள் முதல் செயல்பட தொடங்கின.
பாதுகாப்பு பணியில் ஆயுதம் தாங்கிய காவலர்
இதில், நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை ஆகியவை 3 சுழற்சி முறையிலும், வீடியோ கண்காணிப்புக்கு குழுவினர் 2 சுழற்சி முறையிலும் பணியில் ஈடுபடுவார்கள். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் வாகனத்தில் நிர்வாக நடுவர் ரேங்கில் உள்ள ஒரு அலுவலர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர், வீடியோ பதிவு செய்பவர் ஆகியோர் இருப்பார்கள்.
சட்டவிரோத செயல்களை கண்காணிக்கும்
இதேபோல, வீடியோ கண்காணிப்பு குழுவில் நிர்வாக நடுவர் ரேங்கில் நிலை ஒரு அலுவலர் மற்றும் வீடியோ பதிவு செய்பவர் பணியில் இருப்பார்கள் இந்த குழுவானது சட்டவிராத மதுபானம், பெரிய அளவிலான பணம், ஆயுதங்கள், லஞ்சம் மற்றும் வெடி மருந்துகள், அந்தந்த பகுதியில் சமூக விரோத இயக்கம் ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் படிக்க: வெறும் 5 வாக்காளர்களுக்கு மெனக்கடல்.. தேனி மாவட்ட மலைக்கிராமம் குறித்து பேசிய தேர்தல் ஆணையர்!