ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை … சென்னை அருகே அதிகாலையில் பெரும் பரபரப்பு.!
Chennai Police Encounder: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே ரவுடி தொப்பை கணேஷ் என்பவர் போலீஸாரால் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது கொலை, காெள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
சென்னை மாதவரம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இன்று திங்கள்கிழமை அதிகாலை ( மார்ச் 16 ) ரவுடி தொப்பை கணேஷ் என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் உள்பட சிலர், கடந்த ஜனவரி மாதம் 30- ஆம் தேதி சென்னையில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்து குடும்ப நபர்களை கட்டி போட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ. 25 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்திருந்தனர். இந்த சம்பவத்தில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை மீட்பதற்காக போலீசார் ரவுடி தொப்பை கணேஷை மாதவரம் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, ரவுடி கணேஷ் போலீசாரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, போலீசார் அவரிடம் நிற்குமாரும், சரணடையமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால், அதைக் கேட்காமல் ரவுடி கணேஷ் தப்பி ஓடி உள்ளார். இதனால், போலீசார் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி
இதில், ரவுடி தொப்பை கணேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். போலீசார் என்கவுண்ட்டரில் உயிரிழந்த ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுண்டர் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: சென்னையில் கழுகு பார்வையில் தேர்தல் பறக்கும் படை… 128 வாகனங்களில் களமிறங்கியது!




கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கைது
இதைத் தொடர்ந்து, ரவுடி தொப்பை கணேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் சம்பந்தப்பட்ட வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரவுடி தொப்பை கணேஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 2 வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சென்னையில் பிரபல ரவுடியாக இருந்து வந்த சேராவின் கூட்டாளியாக ரவுடி தொப்பை கணேஷ் இருந்து வந்தார்.
ஜாமீனில் வந்த ரவுடி தொப்பை கணேஷ்
இவருடன் தொடர்புடைய அறிவழகன் என்பவரை வேறொரு வழக்கில் போலீசார் சுட்டு பிடித்திருந்தனர். அந்த நபர் அளித்த தகவல்களின் அடிப்படையில், ரவுடி தொப்பை கணேசை போலீசார் கைது செய்திருந்தனர். இதில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி கணேஷ் மேற்கண்ட நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சென்னை அருகே அதிகாலையில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை… கைதான எஸ்பி செந்தில்குமார்… விசாரணைக்கு 2 தனிப்படைகள் அமைப்பு!