‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்
சென்னையில் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 9, 2026 இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களிடம் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக்கொள்ள அறுவுறுத்தினார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 9 : சென்னையில் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 9, 2026 இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களிடம் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக்கொள்ள அறுவுறுத்திய அவர், தன்னை சந்திக்க விரும்புகிறவர்களுக்கு அது கிரீன் கார்டு போல எனவும் எளிதில் தன்னை சந்திக்கலாம் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ள சரத்குமார் அறிவுரை
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 9, 2026 இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம். ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது; இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். என்னை சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்து இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம் என்றார்.
மேலும் பேசிய அவர், தற்போது ஷூட்டிங்கில் இருப்பதால் தாம் “நாட்டாமை குடும்பம்” என பச்சைக் குத்திக்கொள்ளவில்லை என்றும், ஷூட்டிங் முடிந்த பிறகு தானும் பச்சைக் குத்திக்கொள்வேன். நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்ப அடையாளமாக பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தோன்றியது. விரும்புவோர் பச்சை குத்திக் கொள்ளலாம். வற்புறுத்தவில்லை என்றார்.




இந்த நிலையில் சரத்குமாரின் இந்த பேச்சைத் தொடர்ந்து, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலர் கையில் பச்சை குத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மதுரையில் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை சரத்குமார் தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியிடுன் கூட்டணி வைத்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2024 மார்ச் மாதம் பாஜகவில் அதனை இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.