ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு: திண்டிவனத்தில் நிற்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
Tindivanam Station: சென்னை எழும்பூர்–தஞ்சாவூர் (16865/16866) மற்றும் சென்னை எழும்பூர்–மங்களூரு (16159/16160) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் 2026 மார்ச் 16-ந் தேதி முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை இருந்து செல்லும் மற்றும் திரும்பும் இரு திசைகளிலும் அதிகாலை நேரங்களில் தலா 2 நிமிடங்கள் ரெயில்கள் நிறுத்தப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் இடையே தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16865/16866) வரும் 16-ந் தேதி திங்கட்கிழமை முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுத்தம் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சென்னை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்வது மேலும் எளிதாகும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை – தஞ்சாவூர் ரெயிலின் நிறுத்த நேரம்
சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் போது, இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 12.13 மணிக்கு திண்டிவனம் ரெயில் நிலையத்தை அடைந்து 2 நிமிடங்கள் நின்று பின்னர் தனது பயணத்தை தொடரும். அதேபோல், தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் திரும்பும் போது அதிகாலை 2.13 மணிக்கு திண்டிவனம் நிலையத்தில் வந்து 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் நிறுத்தம்
இதனுடன், சென்னை எழும்பூர் – மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16159/16160) கூட வரும் 16-ந் தேதி முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கும் திண்டிவனம் பகுதியில் இருந்து நேரடி ரெயில் சேவை கிடைக்கிறது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது..
மங்களூரு ரெயிலின் நிறுத்த நேர விவரம்
சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் போது, இந்த ரெயில் அதிகாலை 12.58 மணிக்கு திண்டிவனம் நிலையத்தை அடைந்து 2 நிமிடங்கள் நின்று செல்லும். அதேபோல், மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூர் திரும்பும் போது அதிகாலை 1.15 மணிக்கு திண்டிவனம் ரெயில் நிலையத்தில் வந்து 2 நிமிடங்கள் நின்று பின்னர் தனது பயணத்தை தொடரும் என்று தெற்கு ரெயில்வே தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பரிசோதனை முறையில் தொடங்கும் நிறுத்தம்
தற்போது இந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் பரிசோதனை முறையிலேயே நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு மற்றும் பயணிகளின் பயன்பாடு ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இந்த நிறுத்தம் நிரந்தரமாக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் திண்டிவனம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ரெயில் பயணிக்கும் மக்களுக்கு எதிர்காலத்தில் மேலும் வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.