கோவையில் அதிர்ச்சி.. போலீஸ் போல நடித்து ரூ.38 ஆயிரத்தை ஆட்டையை போட்ட கில்லாடிகள்.. வலையில் வீழ்த்திய காவல்துறை!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் போலீசார் பேசுவது போல நடித்து ரூ.38 ஆயிரத்தை நூதன முறையில் திருடிய இருவரை இணைய வழி குற்றத் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது கைபேசிக்கு கடந்த மே மாதம் 15- ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய, மர்ம நபர்கள் நாங்கள் பீளமேடு காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர். இதை உண்மை என நம்பிய ஜெகதீசன் அவர்களது பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது, நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்திருப்பதாகவும், அதற்கு உடனடியாக அபராதம் கட்ட வேண்டும் என்று அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் தான் அந்த அபராத தொகையை கட்டி விடுவதாக தெரிவித்துள்ளார். உடனே, தொகையை கட்டுமாறும் அந்த மர்ம நபர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதையும் உண்மை என நம்பிய ஜெகதீசன் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி கூகுள் பே மூலமாக ரூ.38 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்
பின்னர், அவர்கள் தொடர்பை துண்டித்துள்ளனர். சிறிது நேரத்துக்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை ஜெகதீசன் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இணைய வழி குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த மர்ம நபர்களின் செல்போன் எண், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி எண், கூகுள் பே ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!




இருவரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்
இதில், அந்த மர்ம நபர்கள் இருப்பிடம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், பச்சாபாளையம் சேர்ந்த சபரி ( 25 வயது) மற்றும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த வினு ( 21 வயது) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக நடித்து ஜெகதீசனிடம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
பின்னர், அவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் போலீசார் பேசுவது போல நடித்து கூகுள் பே மூலமாக பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இது போன்ற மோசடிகள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.