இனி E20 பெட்ரோல் தான்… எத்தனால் கலக்காத பெட்ரோலுக்கு வாய்ப்பில்லை – மத்திய அரசு திட்டவட்டம்
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்தும் திட்டம் தங்களிடம் உள்ளதாகவும், மீண்டும் பழைய எத்தனால் கலக்காத பெட்ரோலை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்தும் திட்டம் தங்களிடம் உள்ளதாகவும், மீண்டும் பழைய எத்தனால் கலக்காத பெட்ரோலை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
எத்தனால் கலக்காத பெட்ரோல் குறித்து மத்திய அரசு விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்ததாவது, நாடு முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ள E20 பெட்ரோல் முற்றிலும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பட்ட எரிபொருள். E20 பெட்ரோல் பயன்பாட்டை ரத்து செய்வதற்கோ அல்லது குறைவான அளவு எத்தனால் கலந்த பெட்ரோல் முறைக்குத் திரும்புவதற்கோ எந்தத் திட்டமும் இல்லை என்றார்.
இதையும் படிக்க : தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
மேலும் பேசிய அவர், தற்போதைய 20 சதவீத எத்தனால் கலவை அளவை அதிகரிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. குறைந்த தரமான எரிபொருள் பயன்பாட்டிற்குத் திரும்புவது அரசின் கொள்கை அல்ல என்றும், மாறாக மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதே அரசின் நோக்கம் என்றார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விவரங்களின்படி, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் சராசரி எத்தனால் கலவை சுமார் 12 சதவீதமாக இருந்த நிலையில், அது 2023-24 இல் 14.6 சதவீதமாகவும், 2024-25 இல் 19.2 சதவீதமாகவும் உயர்ந்தது. மேலும், 2025-26 நிதியாண்டில் (நவம்பர்-ஜூன் காலகட்டத்தில்) நாடு 20 சதவீத எத்தனால் கலவை இலக்கை எட்டியதாக அரசு தெரிவித்தது.
எத்தனால் கலந்த பெட்ரோல் என்ஜின்களைப் பாதிக்கும் மற்றும் மைலேஜைக் குறைக்கும் என்று சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்களை உறுதிப்படுத்தும் வகையில் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆய்வகச் சோதனைகள் மற்றும் நிஜப் பயன்பாட்டுத் தரவுகள் அனைத்தும், எத்தனால் கலந்த எரிபொருள் என்ஜின்களுக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதையும் படிக்க : “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
எத்தனால் பயன்பாட்டால் என்ஜின் பழுது ஏற்பட்டது தொடர்பான புகார்கள் எதுவும் பதிவாகவில்லை என்று முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு முக்கிய பைக் தயாரிப்பு நிறுவனமும் இதே கருத்தை உறுதிப்படுத்தியது. தற்போது நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் கார்களும் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் ஏதுமின்றி எத்தனால் எரிபொருட்களைப் பயன்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.